கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தின விழா காமராஜர் மணி மண்டபத்தில் நேற்று நடந்தது. கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை கலந்து கொண்டார்.
விழாவில், 21 ஆசிரியர்களுக்குநல்லாசிரியர் விருதுகளை வழங்கி முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
ஆசிரியர்களால் தான் நாடு உயர்ந்த நிலையை அடையும். நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி மிக அவசியம். அடிப்படை கல்வி சிறப்பாக இருந்தால், நல்ல வளர்ச்சியை காண முடியும்.
எல்லா ஆசிரியர்களும் நல்ல ஆசிரியர்கள் தான். அதில் சிறந்தவர்களுக்கு விருது வழங்கி வருகிறோம். நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு ஆசிரியர்களின் கடின உழைப்பே காரணம்.
கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது சாதாரண காரியம் இல்லை. தனியார் பள்ளி மாணவர்களுக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சி கொடுப்பதில் வித்தியாசம் உள்ளது.
மருத்துவ படிப்பில் 10 சதவீதம் உள் ஒதுக்கீட்டால் அரசு பள்ளி மாணவர்கள் 37 பேருக்கு எம்.பி.பி.எஸ்., படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மேலும், அதிக இடங்களை அரசு பள்ளி மாணவர்கள் பெற முயற்சி எடுக்க வேண்டும். அந்த வாய்ப்பை ஆசிரியர்கள் உருவாக்கி தர வேண்டும்.
கல்வித்துறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது. பள்ளிகளை துாய்மையாக வைத்திருக்க வேண்டும். இதற்காக ‘அவுட் சோர்சிங்’ முறையை அமல்படுத்த ஆலோசித்து வருகிறோம்.
காலை உணவு திட்டத்தில் தற்போது பால் மட்டும் வழங்கப்படுகிறது. முன்பு பிஸ்கட், ரொட்டி (பிரட்), பழம் வழங்கப்பட்டது. மீண்டும் காலை உணவு திட்டத்தில் பாலுடன் பிஸ்கட், ரொட்டி, பழம் வழங்கப்படும்.மாலையில் வீடு திரும்பும்போது, சிறுதானிய உணவுகள் வழங்கப்படும்.
பள்ளி படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள் உயர்கல்வி பெற புதிதாக கல்லுாரிகள் துவங்கப்படும்.ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். ஒப்பந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்வு மற்றும் பணி நிரந்தரம் வழங்க அரசு கவனம் செலுத்தும்.
இவ்வாறு, முதல்வர் பேசினார்.
அரசு கல்லுாரியாக மாற்றம்
‘புதுச்சேரியில் கூட்டுறவு துறையின் கீழ் கல்வியியல் கல்லுாரி, கடந்த 2005ம் ஆண்டில் இருந்து சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இக்கல்லுாரியை அரசு மூலம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனையொட்டி, கல்லுாரி பெயரை, புதுச்சேரி கல்வியியல் கல்லுாரி என பெயர் மாற்றம் செய்து, அரசின் மூலம் நடத்தப்படும்’ என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நன்றி
Publisher: www.dinamalar.com
