கோவை: கோவை மாவட்டத்தில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கடந்த ஆறு மாதங்களில், 186 போக்சோ வழக்குகள் பதிவாகியிருப்பது, மாவட்ட நிர்வாகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இன்றைய தினம், சமூகம் பல விதங்களிலும் விஞ்ஞான ரீதியாக வளர்ந்திருக்கிறது. அதேநேரம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
சட்டத்தை கடுமையாக்கி, தண்டனைகள் வழங்கப்பட்டாலும் கூட, குழந்தைகளிடம் கொடூரமாக நடந்து கொள்ளும் செயல்கள், நடந்து கொண்டே இருக்கின்றன.
சமீபகாலமாக, மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதத்தில் மட்டும், போக்சோ பிரிவின் கீழ், 186 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.
விசாரிக்க கட்டுப்பாட்டு அறை
இச்சூழலில், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், கடத்தப்படும் குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள், பிச்சையெடுக்க நிர்ப்பந்திக்கப்படும் குழந்தைகள், உளவியல் பாதிப்புக்குள்ளான குழந்தைகள், திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கப்படும் குழந்தைகள் என, பாதிக்கப்படும் குழந்தைகள் பற்றி விசாரிக்க, கலெக்டர் அலுவலகத்தில், பிரத்யேகமாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இதுநாள் வரை, ‘டான்போஸ்கோ’ கீழ் செயல்பட்டு வந்த சைல்டு லைன் பிரிவு, தற்போது மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இங்கு 14 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். கடந்த 20 நாட்களில் மட்டும், 87 புகார்கள் பதியப்பட்டிருக்கின்றன; நாளொன்றுக்கு சராசரியாக, 8 புகார்கள் வரை பதிவாகியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பதிவாகாத சம்பவங்கள் எத்தனையோ?
வளர்க்க முடியவில்லையாம்!
இதுதொடர்பாக, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவினர் கூறியதாவது:சமீபத்தில், பிளஸ் 2 மாணவன் மற்றும் மாணவி நட்பாகி, நெருக்கமாக இருந்ததில், அம்மாணவி எட்டு மாத கர்ப்பமாக இருக்கிறார். இதுதொடர்பாக, விசாரித்து வருகிறோம். கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்த குழந்தை, குடும்ப சூழலால் தங்களால் வளர்க்க முடியாத குழந்தை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 10 குழந்தைகள் ‘சரண்டர்’ செய்யப்பட்டுள்ளனர். அக்குழந்தைகளை, மாவட்ட குழந்தைகள் நல பிரிவு பராமரித்து வருகிறது. விதிமுறைகளுக்கு உட்பட்டு, தத்து கொடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
புகார்கள் பல வகை
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மட்டுமின்றி, குழந்தை திருமணம், பெற்றோர்கள் பிரிவதால் ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகள், குழந்தையை மனைவி அழைத்துச் சென்று விடுதல், கணவன் அல்லது மனைவிக்குள் கள்ளத்தொடர்பு உள்ளிட்ட பல வகைகளில், புகார்கள் வருகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நன்றி
Publisher: www.dinamalar.com
