தமிழகத்தில் மகளிருக்கு உரிமைத்தொகை செப்.,15 முதல் அரசு வழங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 24 முதல் வினியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்த படிவங்களை ஆக.20 வரை பெற்றனர்.
இப்பணிகளில் வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, ரேஷன் கடை பணியாளர்கள், இல்லம்தேடி கல்விப் பணியாளர்கள் பலரும் செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் 9 லட்சத்து 50 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களில் 66 சதவீதத்தினர், அதாவது 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர்.
இவ்வாறு பெற்ற படிவங்களில் முழுமையான விவரங்கள் இல்லாத படிவங்களை வழங்கியோரின் வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்து முழுமையாக பெற உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது ஒவ்வொரு வி.ஏ.ஓ.,க்கள் ரேஷன் கடை பணியாளர்கள், வருவாய் அலுவலர்கள், ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களுக்கு மொத்த படிவங்களையும் பிரித்துக் கொடுத்து வீடுவீடாக சென்று ஆய்வு நடத்தும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திட்டத்தை அமல்படுத்துவதற்கான நாட்கள் நெருங்குவதால் விண்ணப்ப படிவங்களை விரைவாக பெற்று உரிமைத்தொகை வழங்கும் கட்டாயத்தில் அரசு உள்ளது. இதனால் ஆய்வுப் பணிகளை தீவிரப்படுத்தும்படி அனைத்து துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளனர். விண்ணப்ப படிவங்கள் அலைபேசி ‘செயலி’யில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆய்வுப்பணிக்கு வருவாய்த்துறையினர் 70 சதவீதம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிற துறையினர் 30 சதவீதம் பேர் உள்ளனர். வருவாய்த் துறையில் வி.ஏ.ஓ.,க்கள் உள்ளதால் அன்றாட பணிகள் பாதிப்பதாக புலம்புகின்றனர். இவர்களுக்கு நுாறு, இருநுாறு விண்ணப்பதாரர்கள் விவரங்களை அலைபேசியில் அனுப்புகின்றனர்.
அவற்றை ஆய்வு செய்து முடித்ததும் பணிமுடிந்தது என்று கருதும்போது, மேலும் நுாறு, இருநுாறு விண்ணப்பதாரர்களின் விவரங்களை அனுப்பி உடனே முடிக்கும்படி உத்தரவிடுகின்றனர். பணி முடித்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, ‘நிராகரிப்பு’ இல்லாதது குறித்தும் கேட்பதாக கூறுகின்றனர்.
வருவாய்த்துறையினர் சிலர் கூறுகையில், ”இத்திட்டம் வரவேற்புக்குரியதாக இருந்தாலும், போதுமான அவகாசம் இன்றி அவசரமாக செயல்படுத்துகின்றனர். இப்பணிக்கென சிறப்பு ஊதியமும் கிடையாது.
ஒரு வாரத்திற்கு முன்புதான் ‘செயலி’யை பதிவேற்றம் செய்து பணியை துவக்கினால் முதல் 2 நாட்கள் சர்வர் பிரச்னை ஏற்பட்டது. தற்போது நாட்கள் நெருங்குவதால் ஆய்வுப் பணியை தீவிரப்படுத்துகின்றனர். இதனால் வழக்கமான பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. நெருக்கடியான சூழலில் மனஉளைச்சலாக உள்ளது” என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நன்றி
Publisher: www.dinamalar.com