கோவை: சந்திரயான் -3 நேற்று நிகழ்த்திய சாதனை, உலக நாடுகள் மத்தியில் ஒவ்வொரு இந்தியரையும் காலரை துாக்கி விட்டு, நடக்க வைத்து விட்டது. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், பொதுமக் களில் ஒருவர் தேசியக்கொடியேந்தி வந்து, நேரடி நிகழ்வை கண்டு பெருமிதத்துடன் பொங்கினார்.
நம் விஞ்ஞானிகள் சாதிப்பார்கள்
சந்திரயான் – 3, இந்தியர் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம். சந்திரயான் -2 தோல்விக்கு பிறகு, இனி இந்தியா அவ்வளவுதான் என, உலக நாடுகள் நினைத்தன. சந்திரயான் – 3 இந்த அளவுக்கு சாதனை படைக்கும் என யாரும் நினைக்கவில்லை. நம் விஞ்ஞானிகளுக்கு இந்த உற்சாகம் போதும்; பல சாதனைகள் படைப்பார்கள்.
-டாக்டர் சண்முகம், கோவை.
இது தென் துருவ வெற்றி
சந்திரயான் – 3 நிலவில் லேண்ட் ஆனது, ஒரு வரலாற்று சாதனையாகும். இதில் ஒரு தனித்துவம் என்னவென்றால், தென் துருவ பகுதியில் லேண்டானதுதான் மிகப்பெரிய சாதனை. இதுவரை எந்த நாடும், இந்த பகுதியில் ராக்கெட்டை லேண்ட் செய்ய முயற்சி செய்தது இல்லை. நாம் முயற்சித்து வெற்றி பெற்று விட்டோம்.
– ஷோயிப் முகமது, தனியார் ஊழியர்,கோவை.
விஞ்ஞானிகளை ஊக்குவிக்கணும்
விஞ்ஞானத்தில் வளர்ந்த நாடுகள் செய்ய முடியாத சாதனையை, வளர்ந்து வரும் இந்தியா செய்துள்ளது. இதை விட பெருமை, நமக்கு வேறு என்ன வேண்டும். இந்திய விஞ்ஞானிகள் விண்வெளி ஆராய்ச்சியில் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்துவார்கள். நாம் அத்தனை பேரும், நம் விஞ்ஞானிகளின் இது போன்ற சாதனைகளை, பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.
-ஆர்த்தி, தனியார் ஊழியர், கோவை.
ரொம்ப பெருமையாக இருக்கிறது
இந்தியர் அனைவருக்கும் இது ஒரு பொன்னான நாள். எந்த நாடும் நிலவில் தென் துருவத்தில் ராக்கெட்டை இறக்கியது இல்லை. நாம்தான் அந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறோம். இதற்கு 620 கோடி ரூபாய்தான் செலவாகி உள்ளது. மற்ற நாடுகள் இதற்கு, 6000 கோடி செலவு செய்ய வேண்டி இருக்கும். ரொம்ப பெருமையாக இருக்கிறது.
-வேலுசாமி, சுயதொழில், கோவை.
கொண்டாட வேண்டும்
சந்திரயான் – 3 பொறுத்தவரை வெற்றி பெறாது என்றுதான் மற்ற நாடுகள் நினைத்து கொண்டு இருந்தன. ஆனால் இந்திய விஞ்ஞானிகள் அபாரமான சாதனையை படைத்து இந்திய நாட்டுக்கு பெருமை தேடித்தந்துள்ளனர். இந்த வெற்றியை நாடு முழுவதும் கொண்டாட வேண்டும். நம் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.
– யசோதா, ஆசிரியை, கோவை.
உழைப்புக்கு கிட்டிய வெற்றி
‘டிவி’யில் பார்த்த அந்த நிமிடங்களை மறக்க முடியாது. இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். அவர்களின் கடுமையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது. நாம் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கலாம். நம் வல்லரசு கனவும் விரைவில் நிறைவேறும். அதில் சந்தேகமே இல்லை.
– பாலாம்பிகா, இல்லத்தரசி, கோவை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நன்றி
Publisher: www.dinamalar.com