அரசு திட்டங்களை முடிக்க உயர்மட்ட கமிட்டி… அமைப்பு; உட்கட்டமைப்பு பணிகளுக்கு கிடுக்கிப்பிடி| A high-level committee… set up to complete government projects; Grab for infrastructure works

புதுச்சேரி,: புதுச்சேரி அரசு துறைகளில் 3 கோடிக்கு மேல் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணித்து விரைந்து முடிக்க அரசு செயலர்கள் தலைமையில் முதல் முறையாக உயர்மட்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் எந்த அரசு அமைந்தாலும் அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் துளியளவும் வேகமில்லை. கட்டடங்கள், பாலம், சாலை என எந்த உட்கட்டமைப்பு திட்டங்களை எடுத்துக்கொண்டாலும், குறித்த நேரத்தில் அதிகாரிகளும் முடிப்ப தில்லை.

மக்கள் அதிருப்தியடையும் அளவிற்கு ஆமை வேகத்தில் நடைபெறும். இதற்கு உப்பனாறு மேம்பாலத்தினை உதாரணமாக சொல்லலாம். இன்னும் பணி ஜவ்வாக நடந்து வருகிறது. இதேபோல் காமராஜர் மணிமண்டபமும் பல ஆண்டுகளாக ஜவ்வாக இழுத்து வந்து ஒருவழியாக தட்டுதடுமாறி திறக்கப்பட்டது.

அடுத்து, ஏதாவது புதிய திட்டத்தை அரசு அறிவித்தாலும், நீங்க எப்ப முடிப்பீங்க… அதுவரைக்கும் நாங்க வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என, ஒத்துழைப்பு தராமல், அத்திட்டத்தை துவங்கும்போதே கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். குபேர் மார்க்கெட் கட்டும் பணியிலும் இதுவே எதிரொலிக்கிறது.

இதுபோன்ற சூழ்நிலையில், புதுச்சேரி அரசு துறைகளில் 3 கோடிக்கு மேல் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணித்து விரைந்து முடிக்க அரசு செயலர்கள் தலைமையில் புதிய உயர்மட்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவினை தொடர்ந்து, முதல் முறையாக இந்த கமிட்டி புதுச்சேரி அரசில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காரணம் என்ன

இவ்விஷயத்தில், மத்திய அரசு தலையிட்டதற்கு காரணம் என்ன என, அரசு செயலர்களிடம் கேள்வி எழுப்பியபோது, கட்டுமான பணிகள் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அதன் செலவினங்களை கட்டுப்படுத்துவது மிக முக்கியம்.

கச்சிதமாக திட்ட மிட்டு மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளிலும் கூட பலருக்கு பட்ஜெட்டில் துண்டு விழுவது பொதுவான சிக்கலாக இருக்கிறது.

திடீரென ஏற்பட்ட கட்டட பொருட்கள் விலையேற்றம், பட்டியலில் இல்லாத புதிய செலவினங்கள், கட்டட பிளானில் எதிர்பாராது செய்யப்பட்ட கூடுதல் மாற்றங்கள் ஆகியவை கட்டுமான பட்ஜெட்டை எகிற வைத்துவிடுகின்றன.

இதனால் புதுச்சேரி அரசுக்கும் சரி, மத்திய அரசுக்கும் சரி திட்ட செலவு வீணாக பல மடங்காக உயர்ந்து விடுகிறது.

இது தொடர்பாக, நிதித் துறை செயலராக இருந்த பிரசாந்த் கோயல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதிகாரிகளை நம்பாமல் நேரடியாக அரசு செயலர்களை களம் இறக்கி பெரிய திட்ட பணிகளை கண்காணித்தால் விரைந்து முடிக்கலாம் எனவும் ஆலோசனையும் முன் வைத்து இருந்தார்.

அவருடைய ஆலோசனையை ஏற்ற மத்திய அரசு, புதுச்சேரியில் திட்டங்களை விரைந்து முடிக்க அரசு செயலர்களை கொண்டு கமிட்டி அமைக்க உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் 3 கோடிக்கு மேல் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க தற்போது அரசு செயலர்கள் தலைமையில் உயர்மட்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் இக்கமிட்டி மாதம் இருமுறை கூடி அனைத்து பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு விரைந்து முடிக்க உத்தரவிட உள்ளது.

கமிட்டியில் யார் யார்

புதுச்சேரி அரசின் உட்கட்டமைப்பு திட்டங்களை விரைந்து முடிப்பதற்கான கமிட்டியில் நிதித்துறை செயலர் சேர்மனாகவும், திட்டதுறை செயலர் துணை சேர்மனாகவும், வருவாய், பொதுப்பணித் துறை செயலர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளது. திட்ட துறை இயக்குனர், உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.dinamalar.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *