திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள நாயக்கனேரி மலைக் கிராம ஊராட்சியில், பழங்குடியினப் (எஸ்.டி) பிரிவினர் பெரும்பான்மை வாக்காளர்களாக இருக்கின்றனர். 2021 ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது, இந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, பட்டியலினப் (எஸ்.சி) பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், கடும் எதிர்ப்பு கிளம்பியது. பழங்குடி மக்கள் தேர்தலைப் புறக்கணித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, தலைவர் பதவிக்கு ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த இந்துமதி என்ற ஒரேயொரு இளம்பெண் மட்டுமே, வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால், போட்டியின்றி அவர் தேர்வுசெய்யப்பட்டார்.
ஆனால், எதிர்த்தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, பதவியேற்கத் தடை உத்தரவு பெற்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால், இந்துமதியால் ஊராட்சித் தலைவராகப் பதவியேற்க முடியவில்லை. இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டபோதும், நாயக்கனேரி ஊராட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் சாதிப்பதாக இந்துமதி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுவருகிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் கைவினைக் கலைஞர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, நாயக்கனேரி விவகாரம் குறித்துக் கேள்வியெழுப்பி, தமிழ்நாட்டையும், ஆளும் தி.மு.க அரசையும் கடுமையாக விமர்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. ‘‘தமிழ்நாட்டில் பட்டியலினப் பெண் ஊராட்சித் தலைவராகப் பதவியேற்பது தடுக்கப்படுவதாக வெளியான செய்தியைப் படித்தேன். பட்டியலினப் பெண்ணுக்கு உரிமை மறுக்கப்படுவதுதான் சமூகநீதியா… இந்த நிலையில், சமூகநீதியைக் காப்பதாக பரப்புரை செய்கின்றனர். ஆனால், பட்டியலின மக்கள் ஒடுக்கப்படுகின்றனர். சமூகத்தில் விஷத்தைப் பரப்புகின்றனர். சமூகத்தைப் பிளவுப்படுத்திவைத்திருக்கின்றனர்’’ என்று ஆளுநர் பேசியிருந்தார்.
ஆளுநரின் இந்த விமர்சனம் கடும் சர்ச்சையைக் கிளப்பியிருந்த நிலையில், ஏழு நாள்கள் கழித்து, தி.மு.க தலைமைத் தரப்பிலிருந்து பதிலடி கொடுத்திருக்கிறார் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன். இன்றைய தினம் துரைமுருகன் வெளியிட்ட கண்டன அறிக்கையில், ‘‘நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியேற்பு குறித்து, உயர் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவைக்கூட அறிந்துகொள்ள முயலாமல், தமிழ்நாடு அரசுமீது ஆளுநர் திட்டமிட்டு அவதூறு பரப்புரை செய்வது, வேதனைக்குரியது. அரசியல் சட்டப் பதவியில் இருப்பவர், அரசியல் கட்சித் தலைவரைப்போல, குறிப்பாக பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர்போலப் பேசி, அமைதிக்குக் குந்தகம் விளைப்பது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. தமிழ்நாட்டில் மொத்தமிருக்கும் 12,525 ஊராட்சிகளில் 4,357 இடங்கள் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றான நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி மட்டுமே நீதிமன்ற வழக்கின் காரணமாக, தேர்ந்தெடுக்கப்பட்டவர் பொறுப்பேற்க இயலாத நிலை இருந்தது.

இந்த நாயக்கனேரி வழக்கில் 07-10-2021 அன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில், `போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார். எனவே, ஒதுக்கப்பட்ட இடத்துக்குரிய பிரிவைச் சேர்ந்தவராக இந்த நபர் இல்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிற காரணத்தால், சம்பந்தப்பட்ட நபர் பொறுப்பேற்கக் கூடாது என்று தெளிவாக்குகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ‘திராவிட மாடல் அரசின் சமூகநீதிக் கொள்கை, பா.ஜ.க-வையும் அதன் அமைப்புகளையும் தமிழ் மண்ணுக்குள் செல்வாக்கு பெற முடியாமல் தடுத்து வைத்திருக்கிறதே’ என்ற ஆதங்கம்தான் ஆளுநர் இப்படிப் பேச காரணம். பட்டியலின, பழங்குடியின மக்கள்மீது அவருக்கு அக்கறை இல்லை. அப்படி அவருக்கு உண்மையாகவே அக்கறையிருந்தால், ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்று சட்டம் பிறப்பித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்றவர்களிடம் கடிந்துகொண்டிருக்கலாம்.
அடிக்கடி டெல்லிக்குச் செல்லும் ஆளுநர், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கெதிராக அதிகரித்திருக்கும் குற்றங்களைக் கண்டு வெகுண்டெழுந்திருக்கலாம். உயர் நீதிமன்ற உத்தரவிலுள்ள ஒரு ஊராட்சியை மட்டும் பற்றிப் பேசுவதன் உள்நோக்கம் என்ன… யாரை ஏமாற்ற இந்த நாடகமாடுகிறீர்கள்… தமிழ்நாடு சமூகநீதி மண். இந்த விவரங்களும், வரலாறும் தெரியாத ஆளுநர், சிறப்பாகச் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டிவரும் திராவிட மாடல் அரசைத் தொடர்ந்து விமர்சிப்பதைத் தவிர்ப்பது நல்லது. அரசியல் பேச வேண்டுமென்றால், ‘அரசியல் தலைவராக’ தன்னை மாற்றிக்கொண்டு தாராளமாகத் தன் கருத்தைத் தெரிவிக்கட்டும். அதற்கு பதிலடிக் கொடுக்க நாங்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழக மக்களுமே தயாராக இருக்கின்றனர். எனவே, உண்மைக்கு மாறான இத்தகைய பேச்சுகளைத் தவிர்த்துவிட்டு, தனது நேரத்தை உருப்படியாகச் செலவிட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் ஆக்கபூர்வமாகச் செயல்படும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலினப் பெண் இந்துமதிக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்க வலியுறுத்தி, ‘சமூகநீதி மறுப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்குழு’ சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் திராவிடர் கழகத்தினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எனப் பலர் கலந்துகொண்டனர். இந்துமதியும் பங்கேற்று, எதிர்ப்பைப் பதிவுசெய்தார். இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. அரசியல் களத்தில் ஆளுநருக்கும், ஆளும் தி.மு.க அரசுக்கும் இடையே கருத்து மோதலை ஏற்படுத்தியிருக்கும் நாயக்கனேரி விவகாரம், போராட்டமாகவும் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்திருப்பதால், உச்சக்கட்ட பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது, நாயக்கனேரி ஊராட்சி.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com