“மாநாட்டில் எடப்பாடிக்கு புரட்சித் தமிழர் பட்டம் கொடுத்த சாமியாரே பின்வாங்கிவிட்டாரே?”
” அது எனக்கு தெரியாது. ஆனால் பட்டம் என்பது தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், தலைமையை கௌரவிக்கவும் கொடுக்கப்படுவது. ஸ்டாலினை தளபதி என்கிறார்களே… அவர் எந்த நாட்டின் படைக்கு தலைமை தாங்கி யாருடன் சண்டை போட்டார். ஆனால், எடப்பாடியாருக்கு புரட்சி தமிழர் மட்டும் பொருந்தும். ஏனென்றால் தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு முன்பாகவும் மருத்துவ படிப்பில் வெறும் ஒற்றை இலக்கத்தில்தான் சேர்ந்து வந்தார்கள். ஆனால், எடப்பாடியார் கொண்டு வந்த மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இடஒதுக்கிட்டால், நம் பிள்ளைகள் ஆயிரக்கணக்கில் மருத்துவம் பயில்கிறார்கள். இதுபோதாதா புரட்சித் தமிழர் பட்டம் கொடுக்க… இப்படி மக்களுக்கான திட்டத்தை கொடுக்காமல், 7.5 சதவிகித இடஒதுக்கீட்டை நாங்கள்தான் கொண்டுவந்தோம் என்று சொல்ல அவர்களுக்கு நாக்கு கூசவில்லையா?”


” ஆனால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும்வரை நீட் தேர்வு வரவில்லையே. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தானே அமலானது?”
“நீட் தேர்வுக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியில்தான். அதை அப்போதே எதிர்ப்பு தெரிவித்தால், நீட்-டே வந்திருக்கிறாதே. அம்மா இருக்கும்போது அதற்கு இரண்டு ஆண்டுகள் விலக்கு பெற்றார். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பு செயல்படுத்த அனுமதி வழங்கியதால், வேறு வழியில்லாமல் அமலானது. நீட் சமமற்ற தேர்வு என்பதால்தான் நம் அரசு பள்ளி பிள்ளைகள் பாதிப்பு அடையக்கூடாதென இலவச பயிற்சி நடத்தினோம். 7.5 சதவிகித இடஒதுக்கீடு கொண்டு வந்தோம். ஆனால், மசோதா வரும்போது விட்டுவிட்டு, நீட் தேர்வை ரத்து செய்ய சூச்சமம் தெரியுமென மக்களை ஏமாற்றி வெற்றிப் பெற்றுவிட்டு, பயிற்சி வகுப்புகளையும் நடத்தாமல் உண்ணாவிரதம் இருக்கிறது தி.மு.க. அப்போது கச்சதீவு, இப்போது நீட் என அவர்கள் கொண்டுவந்ததற்கு எதிராக போராடும் ஏமாற்று வேலைதான் திராவிட மாடல் ஆட்சியென்றால், இது திராவிட மாடல் அரசுதான்.”


“தி.மு.க எதிர்ப்புதான் அ.தி.மு.க-வின் கொள்கையென்றால், அ.தி.மு.க-வுக்கென்று கொள்கையே கிடையாது என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தது சரிதானே?”
“அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் கொள்கை மாறுபாடு என்பது எப்போதுமே இல்லை. திராவிட கொள்கைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு தி.மு.க கருணாநிதியின் குடும்ப கம்பனியாகவும், ஊழலின் ஊற்று கண்ணாகவும் தடம் மாறிவிட்டதால்தான் அ.தி.மு.க-வை தலைவர் உருவாக்கினார். 69 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளிட்ட திராவிட சமூகநீதி கொள்கைகளின் அடி நாளங்களை அ.தி.மு.க-தான் தமிழகத்தில் உறுதி செய்திருக்கிறது. கருணாநிதி, ஸ்டாலின், இப்போது அவரது மகன் என கம்பனி மாதிரிதானே தி.மு.க இயங்குகிறது. ஆனால், அ.தி.மு.க மூன்றாவது தலைமுறை தலைமைக்கு எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்த அடிப்படை தொண்டன் தானே வந்திருக்கிறார். இது தி.மு.க-வில் செயல்படுத்த முடியுமா?”
நன்றி
Publisher: www.vikatan.com