பில்கிஸ் பானோ வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வு, தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, அதை ரத்து செய்து, 11 பேரும் 2 வாரங்களுக்குள் சரணடைய தற்போது உத்தரவிட்டுள்ளது. ‘என் நெஞ்சின் மேல் அழுத்தியபடியிருந்த மலையை அப்புறப்படுத்தியதுபோல, வழங்கப்பட்டுள்ள இந்த நீதி என்னை உணர வைக்கிறது’ என்று தெரிவித்துள்ளார் பில்கிஸ் பானோ.
பில்கிஸ் பானோ செயற்பாட்டாளரோ, போராளியோ அல்ல. குடும்பம், குழந்தை என வாழ்ந்து வந்தவரை மதவெறியும், பெண்ணுடலை வேட்டையாடும் ஆணாதிக்க வெறியும் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்குச் சிதைத்துப் போட்டன. பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை மறைக்க சட்டம் கவசம் வழங்கும்போதிலும், மீடியாவை நேரடியாகச் சந்தித்து, 22 வருடங்களாக நீதிக்குப் போராடும் அந்த சாமான்ய மனுஷியின் வைராக்கியம் அசாத்தியமானது.
இன்னும், இவ்வழக்கில் 20 வருடங்களுக்கும் மேலாக அவருக்குத் தூண் துணையாக இருக்கும் வழக்கறிஞர் ஷோபா குப்தா, பொதுநல வழக்குகள் தாக்கல் செய்த செயற் பாட்டாளர்கள், மக்கள் மற்றும் பெண்கள், இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி பி.வி.நாகரத்னா என… இந்த நீதிக்கு நங்கூரமிட்ட பலரும் தந்திருக்கும் நம்பிக்கை இதுதான் தோழிகளே… நியாயத்துக்கான போராட்டம் தோற்பதில்லை!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்
நன்றி
Publisher: www.vikatan.com
