நன்றிக்கடன்! – குறுங்கதை | My vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

காலையிலேயே எழுந்த பாலு,மனைவி,குழந்தைகளைப் பார்த்தான்.மூவரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.சரி!தூங்குபவர்களைச் சிரமப்படுத்த வேண்டாமென்று எண்ணி,அந்த ஒட்டுக் குடிசையை விட்டு வெளியே வந்து,ஓரமாக இருந்த மண்வெட்டியை எடுத்துத் தோளில் வைத்தபடி கிளம்பினான்.

ம்!கொஞ்ச காலம் முன்பு வரை அவன் வாழ்க்கை நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது.ஒரு காளவாயில் கல் அறுக்கும் வேலையில் அவன் சேர்ந்து,அங்கேயே வேலை செய்த உமாவையும் விரும்பிக் கைப்பிடித்தான்.இருவரும்இரண்டு குழந்தைகளுக்கும் பெற்றோர்களாகி விட்டார்கள்.

ஏழ்மை

கொரோனா காலம் அவர்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போட,அவனையும் தாக்கியது.சில நாட்களுக்குப் பிறகு வந்த காய்ச்சல்,மேலும் அவனைப் பலஹீனப்படுத்த,சுமை தூக்கும் வலு அவனை விட்டு அகன்று விட்டதாக,அரசு மருத்துவமனை டாக்டர்கள்,சில சோதனை முடிவுகளைக் கொண்டு தெரிவிக்க,அவன் உடைந்தே போனான்.

அப்பொழுது ஆறுதல் கூறி அவனைத் தேற்றியது உமாதான்.’நான் இருக்கிறேங்க உங்களுக்கு…பயப்படாதீங்க…எனக்கு இன்னும் ஒடம்புல நெறையத் தெம்பு இருக்குது.வெயிட் தூக்க மட்டுமில்ல…இந்தக் குடும்பச் சுமையையும் சுமக்க!ஆண்டவன் ஏதோ ஒரு வழியைக் காட்டுவார்…கவலையை விடுங்க.’என்று அவள் எவ்வளவு சொன்னாலும்,அவன் மனதால், திருப்தி அடையவில்லை.வேறு வழியும் தெரியவில்லை.சுமை தூக்குவது,குனிந்து நிமிருவது ஆகியவற்றைச் செய்ய வேண்டாமென்று மருத்துவர்களே அவனிடம் அறிவுறுத்தியிருந்தார்கள்.

சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு,பக்கத்துத் தெரு பழனியுடன் சேர்ந்து தொழிலுக்குப் போக ஆரம்பித்தான் பாலு!பழனி சற்றே வயதானவர். அவராலும் அதிக வெயிட்தூக்கமுடியாது.இருவரும் தோளில் மண்வெட்டியுடன் காலையிலேயே கிளம்பி விடுவார்கள்.தோட்டம் இருக்கும் வீடுகளாகப் பார்த்து,புல் செற்றுவது,வேண்டாத களைகளைப் பிடுங்கி எறிவது,மரக் கிளைகளைக் கழிப்பது போன்ற எளிதான பணிகளை,விரும்புபவர்கள் வீடுகளில் செய்து கொடுப்பார்கள்.சிலர் காலி மனைகளில் மண்டிக் கிடக்கும் புல்,புதர்களைச் சுத்தம் செய்யச் சொல்வார்கள்.இதுதான் அவர்கள் தொழில்!

வரும் வருமானத்தை இருவரும் பகிர்ந்து கொள்வார்கள்.ஆனால் எல்லா நாட்களிலும் வேலை கிடைக்காது.சில நாட்களில் நாள் பூரா சுற்றியும் எந்த வேலையும் கிடைக்காமல்,மதிய நேரத்தில் குழாய்த் தண்ணீரைக் குடித்தபடி, பசி மயக்கத்தில் வீடு வந்து சேர்வதும் உண்டு.வீட்டில் மட்டும் அறு சுவை உண்டி காத்திருக்குமா என்ன?ஏழைகளுக்குப் பசியும் பட்டினியுந்தானே உற்ற உறவினர்கள்!

நம்பிக்கை

பழனி வீட்டிற்கு வந்த பாலு,அவருக்கு உடல்நிலை சரியில்லாததையறிந்து,தனியாகவே கிளம்பினான்.

காலையிலிருந்து பல தெருக்களைச் சுற்றியும், ஒருவரும் வேலை தரவில்லை.மதியமும் வந்து விட அங்கே,இங்கே சுற்றி மதியம் வழக்கமாக அவர்கள் வரும் அந்த டீக்கடைப் பக்கம் வந்து விட்டான்.வருமானத்திற்குத் தகுந்தாற்போல் சில நாட்களில் சாப்பாடும்,சில நேரங்களில் டீ-வடையும்,பல சமயங்களில் வெறும் டீயோடும் செல்வதுண்டு.இன்றோ…எதற்கும் வழியில்லை!கையில் காசில்லாத போதுதான் அடிவயிற்றில் அதிகமாகப் பசிக்கும் என்பார்கள்.இன்று பாலுவுக்கும் அப்படித்தான்.ரொம்பப் பசித்தது.சரி!கடையில் போய் ஒரு டம்ளர் தண்ணீராவது குடிக்கலாம் என்று கடையை நோக்கி நடந்தான்.

கடையில் கூட்டம் இன்று அதிகமாக இருந்தது.ஸ்பெஷலாகப் பிரியாணி வேறு போட்டிருந்தார்கள்.பிரியாணி வாசம் பாலுவின் நாசியையும் நிறைத்தது.இருப்பினும்,காசு இல்லாமல் கடையை நெருங்க,அவன் தன்மானம் தடுத்தது.கடைக்கார ரவி,வெளியே வந்தவர் பாலுவைப் பார்த்து விட,கையை ஆட்டிச் சைகையால் கூப்பிட்டார்.

பாலு அருகில் வந்ததும்,பேப்பர் ப்ளேட்டில் சூடான சிக்கன் பிரியாணியைக் கையில் கொடுக்க,அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.’அது ஒண்ணுமில்லை பாலு!இன்னிக்கி நம்ம தலைவரோட மகன் தங்கராசுக்குப் பிறந்த நாள்!அவர் செலவில எல்லோருக்கும் பிரியாணி.வழக்கமா இந்த நேரத்துக்கு நீயும்,பழனியும் வருவீங்களேன்னு நெனச்சேன்.நீ வந்துட்டே.நீங்கள்லாம் நம்ம ரெகுலர் கஷ்டமராச்சே…என்ற ரவி,’அதோ அங்க ஒக்காந்திருக்கவர்தான் தங்கராசு. நீ வேணும்னா ஒரு வாழ்த்து சொல்லிடு!’என்க,பாலு பவ்வியமாக தங்கராசு அருகில் சென்று வாழ்த்தினான்.

நாட்கள் வேகமாக ஓடின.அன்று பழனிக்கும்,பாலுவுக்கும் நிறைய வேலை கொடுத்தார் ஒருவர்.இருவரும் வேலையை முடிக்க முன்னிரவு ஆகி விட்டது.வீடு திரும்ப, ரவியின் கடையைக் கடந்துதான் செல்ல வேண்டும்.அப்படிக் கடந்த போதுதான் அந்தக் கொடூரம் நடந்தது.

பிரியாணி

தங்கராசுவைத் துரத்திக் கொண்டு மூன்று,நான்கு பேர் கையில் கத்திகளுடன் ஓடி வர,பழனி பயந்து விலகிக் கொள்ள,பாலு அவர்களைத் தடுக்க விரைந்தான்.’அன்றைய பசிக்கு,சாதாரண சாப்பாடல்ல…பிரியாணியே கொடுத்த அவரைக் காப்பாற்ற வேண்டியது தன் கடமையென அவன் நினைத்தான்.தோளில் வைத்திருந்த மண்வெட்டியால், தங்கராசு தோளை நெருங்கிய கத்தியைத் தட்டி விட்டான்.பாலு அவ்வாறு செய்யாதிருந்தால் தங்கராசு அந்த இடத்திலேயே சரிந்திருப்பார்.கத்தியுடன் ஓடி வந்த மற்றொருவன்,கோபத்தில் பாலுவின் தோளில் கத்தியைப் பாய்ச்சி விட,அத்துடன் அனைவரும் ஓடி விட்டனர்.

கீழே விழுந்த பாலு வலியால் துடிக்க,பயத்தில் கடைக்குள் ஒதுங்கியிருந்த தங்கராசு வெளியில் வந்து,பாலுவின் கைகளைப் பிடித்தபடி,’நண்பா!என்னைக் காப்பாற்றி விட்டாய்!என் உயிரைக் காப்பாற்றிய உன்னை எப்படியும் நான் காப்பாற்றுவேன்!பயப்படாதே!’என்றபடி தூக்க,ஒதுங்கியிருந்த பழனியும் ஓடி வர,ரவியும் ஓடி வந்து உதவிக்குச் சேர்ந்து கொள்ள,ஆம்புலன்சுக்குப் போன் பண்ணிய தங்கராசு,தன் தலைவர் தந்தைக்கும் விபரம் சொல்ல,நிமிடங்களில், அடுத்து நடக்க வேண்டியவை விரைவாக நடந்தன.

மருத்துவ மனையில்…பாலுவுக்கு ரத்தம் அதிகமாக வெளியேறி விட்டதால் ரத்தம் செலுத்த வேண்டுமென்று சொல்ல,தங்கராசுவே ரத்தம் கொடுத்தார்.

மண்வெட்டி

ஒரு வாரத்திற்குப் பிறகு பாலு டிஸ்சார்ஜ் செய்யப்பட,தங்கராசு சொன்னார்:’ஒரு வேளை உனக்குச் சோறு போட்டதற்கே நன்றிக் கடனாக என்னைக் காப்பாற்றியதாகச் சொல்கிறாய்.அப்டிப்பட்ட நல்ல மனசு கொண்ட உனக்கு முறையாக உதவா விட்டால் நான் நன்றிக்கடன் மறந்தவன் ஆகி விடுவேன்.நாளைக்கே நீ உன் குடும்பத்தாருடன் என் பண்ணை வீட்டுக்கு வந்து விடு.உன் குழந்தைகளை நல்ல பள்ளியில் நான் சேர்த்து விடுகிறேன்.உன் மண் வெட்டியைத் தூக்கிப் போடு.நாளையிலிருந்து என் பண்ணை வீட்டில் வேலை செய்யும் 20 பேரின் கங்காணி நீதான்-மேற்பார்வை செய்யும் மேற்பார்வையாளர் நீ!இதனை நீ மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்.என்னைச் சுற்றி அவர்கள் இன்னமும் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.என் முடிவு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.அதற்கு முன் என் நன்றிக்கடனை நீ ஏற்றுக் கொள்.அன்பு மனம் கொண்ட உன் நன்றிக் கடனையாவது தீர்த்த சந்தோஷத்திலாவது நான் சாவேன்!’

தங்கராசுவின் பேச்சு அவன் நண்பர்களையே அதிரச் செய்தது.’அவன் மனத்தில் இப்படியொரு இரக்கப் பக்கமா?’என்று அனைவரும் நெகிழ்ந்தார்கள்.

‘நீங்கள் சொல்லும் எல்லாவற்றையும் செய்கிறேன்.ஆனால் அந்த மண்வெட்டியை மட்டும் தூக்கி எறியச் சொல்லாதீர்கள்.ஏனென்றால் அது தான் உங்கள் உயிரைக் காப்பாற்றியது;எனக்கு நல்ல வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்தது!’என்று பாலு சொல்ல,அனைவரும் அதனை ஏற்றுக் கொள்வது போல் ஓர் அமைதி அங்கு நிலவியது!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *