“ `இந்தியா’ கூட்டணி வந்தால் நீட் இருக்காது என்கிறார்கள். `இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வரும் சூழல் இருக்கிறதா… அவர்களுக்குளேயே விமர்சித்துக்கொள்கிறார்களே?”
“பன்முகத்தன்மைகொண்ட இந்தியாவுக்குப் பேராபத்தாக இருப்பதோடு, வெறுப்பரசியலை விதைக்கிற பா.ஜ.க வீழ்த்தப்பட வேண்டும். ஆகவே, சின்னச் சின்ன முரண்பாடுகளைத் தவிர்த்து `இந்தியா’ கூட்டணி ஒற்றுமையாக இருப்பது அவசியம்.”

“சாதிவாரி கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் தேர்தல்ரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்துமா?”
“நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என திமுக அறிவிக்கவில்லையென்றால் சமூக நீதியைக் கோரி நிற்கிற தமிழ்ச் சாதிகளின் வாக்குகள்கூட திமுக கூட்டணிக்கு வராமல் மடைமாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த விவகாரத்தில் பாஜக-வின் கருத்தும், திமுக-வின் கருத்தும் ஒன்றாக இருக்கிறது என்ற நிலை தமிழகம் முழுவதும் சென்றுவிடக் கூடாது.’’
`வடமாநிலத் தொழிலாளர்கள் வருகையை எதிர்த்து பேசிவருகிறீர்கள்… அரசுக்கு உங்கள் கோரிக்கை என்ன?”
“வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசு முறையாக கவனம் செலுத்தி, சில வரையறைகளைக் கொண்டுவர வேண்டும் என்று சொல்லிவருகிறேன். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இருப்பதுபோல இன்னர் லைன் பர்மிட் முறையைக் கொண்டுவர வேண்டும். பல்வேறு அசம்பாவிதச் சம்பவங்கள், போலீஸார் மீதே தாக்குதல் என மோசமான நிலையில் இருக்கிறது. அதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.”
“பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி முறிவு பாசிட்டிவ் சைன் என்கிறார் திருமாவளவன்… தி.மு.க-வுக்கு நெருக்கடி என நீங்கள் கருதுகிறீர்களா?”
“கண்டிப்பாக ஏற்படும், இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை நடக்கவில்லை என்றால் இஸ்லாமிய வாக்குகள் அ.தி.மு.க-வுக்குச் செல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. கிறிஸ்துவ மக்களின் வாக்குகளும் அ.தி.மு.க-வுக்குச் செல்லலாம். தனக்குக் கிடைத்துக்கொண்டிருந்த வாக்குகள் கிடைக்காமல் போனாலே அது நட்டம்தானே!”

‘‘அ.தி.மு.க-விலிருந்து கூட்டணி அழைப்புகள் வந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்களே… உண்மைதானா?’’
“தி.மு.க கூட்டணியில் இருந்துகொண்டே நான் தி.மு.க-வை விமர்சிப்பதை சில அமைச்சர்கள் விரும்பவில்லை. எனவே, ‘கடைசி நேரத்தில் தி.மு.க உங்களைக் கழற்றிவிடலாம்’ என்று சிலர் சொன்னார்கள். அது நடக்கும்போது பார்க்கலாம் என்று விட்டுவிட்டேன்.”

“சட்டமன்றத்தில் நீங்கள் பேசினாலே பரபரப்பாகிவிடுகிறதே! ”
“பெஞ்ச்சைத் தட்டிவிட்டுப் போகிற சராசரி எம்.எல்.ஏ நானில்லை. சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகளைத் தொடர்ச்சியாகப் பேசிவருகிறேன். சில திட்டங்களில் இருக்கும் தவறுகளையும் விளைவுகளையும் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டிவருகிறேன். தி.மு.க கூட்டணியில் இருப்பதற்காக மக்கள் பிரச்னையில் சமரசம் செய்துகொள்ளக்கூடியவன் நானல்ல. நான் சட்டமன்றத்தில் பேசுவதை முதலமைச்சரே உன்னிப்பாக கவனிப்பார்.”
நன்றி
Publisher: www.vikatan.com