காவி நிற உடையில் திருவள்ளுவர் இருப்பதுபோலான படத்தை வெளியிட்டு சனாதன துறவி எனக் குறிபிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் “வள்ளுவரை யாரும் கறைப் படுத்த முடியாது, இதுவரை இப்படிபட்ட ஆளுநர்களை இந்தியா இதுவரை கண்டதில்லை“ என காட்டமான விமர்சித்தார். பிரதமர் மோடி ஜனவரி 19-ல் சென்னைவரும் நிலையில் ஜனவரி 17, 18 ஆகிய தேதியில் ஆளுநர் குறித்தும் பா.ஜ.க குறித்தும் ஸ்டாலினின் ஸ்டேட்மென்டுகள் பரபரப்பை கிளப்பின.
நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி கேலோ இந்தியா போட்டியை தொடங்கி வைக்க ஜனவரி 19-ம் தேதி சென்னை வந்தார், அவரின் வருகை ஒருசில தினங்களுக்கு முன்பே செய்திகளாகிவிட்டன. பிரதமர் வருகைக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்ட நிலையில் வள்ளுவர் குறித்தான ஆளுநரின் கருத்து தி.மு.க-வை டென்ஷனாக்கிவிட்டது.
நம்மிடம் பேசிய தி.மு.க-வின் மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, “அய்யன் திருவள்ளுவரை இதுவரை பல பேர் சாதி, மதத்துக்குள் அடைக்க பார்த்திருக்கிறார்கள்.
எதுவுமே நடக்கவில்லை. புதிதாக ஆளுநர் ஆர்.என் ரவி கிளம்பியிருக்கிறார். அவரும் இதில் தோல்வியடைவார். வள்ளுவனை கறைபடுத்த முடியாது, கறைபடுத்த முயன்றவர்கள் தான் கறைப்பட்டு போவார்கள் என்பது கடந்தகால வரலாறு
திருவள்ளுவர் தினத்தில் இப்படி செய்வது ஆளுநரின் விளம்பர மோகத்தை வெளிப்படுத்துகிறது. இத்தனை நாட்கள் பா.ஜ.க சங்கிகள் செய்த வேலையை நானும் பா.ஜ.க சங்கிதான் என நிரூபிக்கும் விதமாக ஆளுநரும் செய்கிறார். அவர் உறுதியாக அம்பலப்பட்டுப் போவார்” என்றார்

பா,ஜ,க மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் பேசும்போது, “பெரியோர்களை ஆன்மிக ரீதியாக பார்த்தால் திராவிட மாடல் அரசுக்கு கசக்கிறது. தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி மோசடி செய்து பழகிவிட்டார்கள். ஆன்மிக அடையாளமான`கோவிந்தா-வையும் நாமத்தையும் கொச்சைப்படுத்துகிறார்கள். இந்த தவறுகளை திட்டமிட்டு திராவிட கூட்டம் செய்கிறது. வள்ளலார் விழா கொண்டாடும்போது விபூதி இல்லாமல் ஏன் கொண்டாடுகிறார்கள், வ.உ.சி படத்துக்கு பட்டை இல்லாமல் வைக்கிறார்கள். திருவள்ளுவர் இப்படித்தான் இருந்தார் என அவர்கள் தாத்தா சொன்னாரா. அவர்கள் தாத்தா சொன்னதை செய்கிறார்கள் என்றால் எங்கள் தாத்தா சொல்வதை நாங்கள் செய்கிறோம்.
வள்ளுவருக்கு எந்த காலத்தில் வெள்ளை உடை வந்ததென சொல்ல சொல்லுங்கள். அது அவர்கள் திட்டமிட்டு உருவாக்கியது. அவர்களுடைய விருப்பம் வெள்ளை உடையில் காண்பிக்கிறார்கள். ஆளுநரின் விருப்பம் காவி உடையில் காண்பிக்கிறார். ஆளுநரை நாம் எப்படி கேள்வி கேட்ட முடியும்?” என வினவுகிறார்.

நம்மிடம் பேசிய தி.மு.க முக்கியப்புள்ளிகள் சிலர், “இவ்விவகாரத்தில் தி.மு.க இப்படி உடனடியாக பதிலளிக்காமல்விட்டால் `சமசரம் செய்து கொண்டது தி.மு.க…மோடியை கண்டு அஞ்சுகிறது தி.மு.க’ என தேவையற்ற விமர்சனங்கள் எழும். அதனை உணர்ந்தே தக்க சமயத்தில் பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது. எங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கு வருவது இந்திய பிரதமர்… வரவேற்பது தமிழ்நாடு முதலமைச்சர்… இது அரசு நிகழ்ச்சியே தவிர.. அரசியல் அல்ல. திருவள்ளுவர் தினத்தில் அல்ல… மோடி வருகைபுரிந்த தினத்தில் ஆளுநர் அப்படி பேசியிருந்தாலும் தி.மு.க ஆளுநரை கண்டித்திருக்கும். ஒருவேளை சங்கடத்தை தவிர்க்க தி.மு.க பொறுத்துக் கொண்டிருந்தால் அரசியல் ரீதியாக பெரும் பின்னடைவையே தரும். தி.மு.க பா.ஜ.கவை இணைந்து பேச அ.தி.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட இயக்கங்கள் கண்கொத்திப் பாம்பாக நிற்பதால், அதற்கு நாம் இடமளித்து விடக்கூடாது” என்றனர்”
அரசியல் பார்வையாளர்கள் சிலரோ “எப்படி பார்த்தாலும் இது தி.மு.க-வுக்கு பின்னடைவுதான். தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகளுக்கு பின்னால் பா.ஜ.க இருக்கிறதென்பதை தொடர்ச்சியாக சொல்லி வருகிறது தி.மு.க. ஆகவே இப்படி மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் பா.ஜ.க-வையும், பிரதமரையும் அழைத்து நிகழ்ச்சி நடந்த வேண்டும் என என்ன அவசியம் வந்தது என அரசியல் அரங்கில் கேள்விகள் எழுந்துள்ளன. தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வேல்முருகன், ஜவாஹிருல்லா ஆகியோர் பிரதமர் மோடியை அழைத்து வந்து விழா எடுப்பது தேவையில்லாத வேலை என வெளிப்படையாகவே விமர்சிக்கிறார்கள்” எனக் குறிப்பிடுகிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
நன்றி
Publisher: www.vikatan.com