திண்டுக்கல் மாவட்டம் பழனி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சியில் 97.30 கோடி செலவில் பழனி – தாராபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையை இருவழி சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்டுத்தும் பணியை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மொ.நா.பூங்கொடி, நெடுஞ்சாலை துறை செயலாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் விரிவாக்கப்பணிகளை கொடியசைத்து தொடங்கிவைத்து விட்டு பேசிய நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, “இந்த நான்கு வழிச்சாலை திட்டத்தை ஒன்றிய அரசாங்கம் தான் போடுவேண்டும், ஏனென்றால் அவர்களிடம் தான் வருவாய் அதிகமாய் இருக்கின்றது. ஆனால் ஒரு மாநில அரசாங்கமே கிராமங்களை இணைக்கும் சாலைகளையெல்லாம் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தும் திட்டத்தை நம் முதலமைச்சர் தற்போது நம் மாநிலத்தில் “முதல்வர் சாலை மேம்பாட்டுத் திட்டம்” என்ற பெயரில் செயல்படுத்தி வருகிறார். அந்த வகைமையில் 2022-2023ம் ஆண்டிற்கான நெடுஞ்சாலை துறையின் மானியக் கோரிக்கையில் இத்திட்டத்தை எதிர்வரும் பத்து ஆண்டுகளில் 2,200 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்தி நான்கு வழிச்சாலையாக மாற்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
சக்கரபாணி என்றாலே `தனி பாணி’ தான், ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, மானியக் கோரிக்கை நடைபெறும் போதும் சரி, தொகுதிக்கு தேவையானவற்றை கேட்டு வாங்கி கொள்வதிலும் சரி அவர் பாணி எப்போதுமே தனி பாணி தான். அவரை பார்த்தாலே பொறாமையாக இருக்கும். ஒட்டன்சத்திரம் நகரப்பகுதியில் 8 கி.மீ தொலைவிற்கு 90 கோடி ரூபாய்க்கு 2021-2022 ஆம் அறிவித்து அந்த ஆண்டே செய்து முடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 39 வருவாய் மாவட்டங்கள் இருக்கின்றன. அனைத்திற்கும் இத்திட்டம் சென்று சேர்ந்ததா என்றால் இல்லை, குறிப்பாக நான் மா.செ வாக இருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. ஆனால் ஒட்டன்சத்திரம் தொகுதியில் அறிவிக்கப்பட்ட ஆண்டே பணி நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. அப்படி அனுமதி அளிக்கவில்லை என்றால் சக்கரபாணியும் விடமாட்டார், அவர் அண்ணன் பெரியமருதுவான ஐ.பெரியசாமியும் விடமாட்டார். ஆக இவர்கள் இருவரும் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு கண்களாக இந்த மாவட்டத்தில் இருந்து வருகின்றனர்.

திண்டுக்கல் என்றாலே அளப்பரிய ஒரு ஈர்ப்பு முதல்வருக்கு இருக்கின்றது அந்த காரணத்தினாலே கோப்புகளில் விரைந்து கையெழுத்து போட்டுவிடுகிறார்.
கிராமங்களில் அதிகமாக இருப்பதும், பயன்படுத்தப்படுவதும் தரைப்பாலங்கள் தான். ஒரு கிராமத்தை மற்றொரு கிராமத்தோடு இணைக்கிற தரைப்பாலம் பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் இருந்து இருக்கின்றது. மலைக்காலங்களில் விவசாய பெருங்குடி மக்களும், சாதாரண மக்களும் இச்சாலையை பயன்படுத்த முடியாத நிலை இருக்கின்றது. தமிழகத்தில் மட்டும் 1,271 தரைப்பாலங்கள் இருக்கின்றன.
இந்த 5 ஆண்டுகளில் 2,220 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரைப்பாலங்கள் மேம்பாலங்களாக தரம் உயர்த்தவேண்டும் என முதல்வர் ஆணையிட்டார். அதன்படி 2021-2022ம் ஆண்டில் 800 கோடி செலவில் 66 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.
2022-2023ம் ஆண்டில் 110 கோடி செலவில் 64 பாலங்கள் கட்டப்பட்டு கொண்டிருக்கின்றன. 2023-2024ம் ஆண்டில் 800 கோடி செலவில் 276 பாலங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மீதமுள்ள பாலங்களும் கட்ட முதல்வர் நிதி ஒதுக்கிவிட்டார் என்றால் இந்தியாவிலேயே தரைப்பாலங்களே இல்லாத முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழும் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது.

இது அரசு விழாவா அல்லது அரசியல் கட்சி நடத்துகின்ற மகளிர் மாநாடா? என்று பிரம்மிக்கும் அளவிற்கு பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இனி வரும் காலங்களில் ஆண்கள் முதல்வரிடம் சென்று எங்களுக்கும் ஏதேனும் சலுகை செய்யுங்கள் என்று கேட்கும் நிலை வந்துவிடுமே.? என்று நினைக்கும் அளவிற்கு இன்றைக்கு நம் திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கென்று எத்துனை சலுகைகள். ஒன்றா இரண்டா பட்டியல் போட, கடந்த 10 ஆண்டு காலகட்டத்தில் மகளிர் கேட்பாரற்று கிடந்தார்கள். நம் திராவிட ஆட்சி பொறுப்பேற்ற உடனே மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி, நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம், பள்ளி – கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை, வீட்டில் இருக்கும் பெண்களை சும்மா தான் இருக்கிறாள் (House Wife) என்று ஆண்கள் ஏளனப்படுத்தும் போது இந்தியாவிலேயே முதன் முதலாக மகளிர் உரிமை தொகை வழங்கி பெண்களை போற்றியது நம் திராவிட மாடல் ஆட்சி.

இத்தமிழ்நாட்டில் உள்ள பெண்களை படி, படி என்று சொல்லி படிக்க வைத்த மும்மூர்த்திகள் மூவர் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர். இன்றைக்கு பெண்கள் கல்வியில் இடைநிற்றல் இல்லாது பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு சென்று ஆண்களுக்கு இணையாக பெண்களும் படிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் இந்த மூன்று மும்மூர்த்திகள் தான்.
தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி தான் அதில் மறுப்பதற்கு இல்லை. இந்த திராவிட மாடல் ஆட்சியில் அதிக பலனை பெறுவது ஆன்மிகம் என்றால் அதுமிகையல்ல
திராவிட மாடல் ஆட்சியையும், ஆன்மீகத்தையும் பிரித்து பார்க்கவே முடியாது. திராவிடத்திற்குள்ளாக தான் ஆன்மிகம் உள்ளது. எனவே ஆன்மிகத்தையும் திராவிடத்தையும் பிரித்து பார்க்கவே இயலாது.
இந்த பழனி-தாராபுரம் இரண்டு வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படுகிறது என்றால் அதற்கு காரணம் பழனி முருகன் கோவில். பழனியாண்டவர் என்று சொன்னால் தைப்பூசத்தையும், பங்குனி உத்திரத்தையும் மறந்துவிட இயலுமா? பழனி முருகன் கோவிலுக்கு பாதையாத்திரையாக வரும் பக்தர்களுக்கு ஏதுவாக அவர்களுக்கு எந்தவித சிரமம் இல்லாமல் இருப்பதற்காகவே இந்த சாலை தரம் உயர்த்தப்படுகிறது. அப்படி பார்க்கும் போது ஆன்மிகத்திற்கு தொண்டு செய்கிற இயக்கம் தான் திராவிட இயக்கம்.

ஒட்டன்சத்திரம் வழியாக பழனிக்கு காவடியெடுத்து நேர்த்திகடன் செலுத்த பாதையாத்திரையாக வரும் பக்தர்கள் நலனை கருத்தில் கொண்ட இந்த திராவிட மாடல் அரசு. காவடி என்றதுமே அண்ணாமலை ரெட்டியார் இயற்றிய காவடி சிந்து தான் நினைவுக்கு வரும் “எட்டுக்குடி முருகையா என்றே சத்தம் அரோகரா..!” என்ற பாடலை பாடி வரும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் என விரும்பிய முதலமைச்சர் ஒட்டன்சத்திரம் முதல் பழனி வரை உள்ள சாலையில் பேவர் பிளாக் கற்களை பதித்து பக்தர்களின் நலனை பாதுகாத்து இருக்கிறார் நம் முதல்வர். அதனால் தான் சொல்கிறேன் ஆன்மிகத்தை சிறப்பு படுத்தும் ஆட்சி இந்த திராவிட மாடல் ஆட்சி என்று.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com