கேலி பேசுவது துன்புறுத்தலாகவோ, கொடுமைப்படுத்துவதாகவோ ஆகாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது. வழக்கின் படி, இதில் சம்பந்தப்பட்ட தம்பதிக்கு மே 1993-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சில நாள்களில் அப்பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் மைத்துனர், அந்தப் பெண் சரியாக சமைக்கவில்லை, வீட்டு வேலைகளைச் செய்யவில்லை என்று கேலி செய்யத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் 1994-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மாமியார், மைத்துனர் மற்றும் கணவர் மோசமாக நடந்துகொண்டதாலும், பிறந்த வீட்டிலிருந்து பத்தாயிரம் ரூபாய் பணம் வாங்கி வரச்சொல்லி துன்புறுத்தியதாலும் விரக்தியடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி பெண்ணின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும் சுவையான உணவைத் தயாரிக்காதது, காலையில் சீக்கிரம் எழுந்திருக்காதது, துணி துவைக்காதது, அதிகமாக சாப்பிடுவது போன்ற செயல்களுக்கெல்லாம் அந்தப் பெண் கேலி செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்திருந்தனர். தற்கொலைக்குத் தூண்டியதற்காக அந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2001-ம் ஆண்டு மூவரையும் குற்றவாளிகள் என்று கூறித் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மூவரும் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை நிறைவுபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், “குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவரைத் தற்கொலைக்குத் தூண்டியதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், அவர்கள் மீது குற்றம் சாட்டுவது நியாயமற்றது.
கேலி செய்தல், பணம் வாங்கி வரச்சொல்லுதல் போன்ற எளிமையான குற்றச்சாட்டுகள் தற்கொலைக்குத் தூண்டுவதற்கு போதுமான காரணங்களாக இருக்காது.

ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டானது, யூகங்கள் மற்றும் அனுமானங்களை ஏற்படுத்துவதற்கு சமம். மேலும் வரதட்சணைக்காக பெண்ணைத் துன்புறுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி ஏற்கெனவே நீதிமன்றம் கொடுத்த உத்தரவை ரத்துசெய்து, குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்துள்ளது. இந்தத் தீர்ப்பு பலர் மத்தியிலும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
நன்றி
Publisher: www.vikatan.com