வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. அதைத் தொடர்ந்து வந்த பலத்த மழையாலும், நிரம்பி வழிந்த ஏரியாலும், சென்னையின் பல்வேறு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது. இதற்கிடையில், சென்னையைச் சுற்றிப் பல பகுதிகளில் மழைநீர் வடிகால் திட்டம் 4000 கோடியில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. மழைநீர் வேகமாக வெளியேறும் என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், பல்வேறு பகுதிகளில் சீரமைப்புப் பணிகளும் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஆனாலும், மழை நின்று 40 மணி நேரத்தைக் கடந்தும் இன்றும் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக, விருகம்பாக்கம், ஆழ்வார் திருநகர், வடபழனி, அரும்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, பள்ளிக்கரணை, கிஷ்கிந்தை சாலை, மேடவாக்கம், மேற்குத் தாம்பரம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்னும் தண்ணீர் சூழ்ந்திருக்கிறது. மேலும், பள்ளிக்கரணை – தாம்பரம் சாலையும்,


கோவிலம்பாக்கம் – துரைப்பாக்கம் சாலையும், வேளச்சேரி – பள்ளிக்கரணை சாலையும், மேடவாக்கம் – சோழிங்கநல்லூர் சாலையின் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பல பகுதிகளில் மூன்றாவது நாளாகத் தொடரும் மின்சாரம் துண்டிப்பும். அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்பும் பொதுமக்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பல பகுதிகளுக்கு இன்னும் மீட்புக் குழுவே செல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் எழத் தொடங்கியுள்ளது. மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் பால் தட்டுப்பாடு கடுமையாக இருக்கிறது. நிலைமை சீராகி வருவதாக சொல்லப்பட்டாலும், 3-வது நாளாக தண்ணீரில் பல இடங்கள் தத்தளிக்கிறது.!
நன்றி
Publisher: www.vikatan.com