பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூரிலுள்ள படாலாவில் நடந்த கிராமிய கண்காட்சியின்போது, 29 வயதான சுக்மந்தீப் சிங் என்ற ஸ்டன்ட்மேன் ஒருவர் ஆபத்தான ஸ்டன்ட் செய்தபோது, துரதிஷ்டவசமாக டிராக்டருக்கு அடியில் உடல் நசுங்கி பரிதபமாக உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. சரச்சூர் கிராம மைதானத்தில் நடைபெற்ற கிராமிய கண்காட்சியில் ஸ்டன்ட் செய்ய தனது டிராக்டருடன் வந்திருந்த சுக்மந்தீப் சிங், தனது டிராக்டரின் முன் சக்கரங்களை உயர்த்தி, பின் சக்கரங்களை தரையில் அழுத்தி, டிராக்டரை ஓட்டத் தொடங்கியிருக்கிறார்.
அப்போது சுக்மந்தீப் சிங் டிராக்டரிலிருந்து தவறி கீழே விழுந்திட, அவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், ஓட்டுநர் இல்லாமல் கூட்டத்தை நோக்கிச் சென்றது. அதை பார்த்த சுக்மந்தீப் சிங், டிராக்டரை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றார். இருப்பினும் அவரின் மற்றொரு கால் சேற்றில் வழுக்கி, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டருக்கு அடியில் சிக்கினார்.
நன்றி
Publisher: www.vikatan.com