கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. தேர்தல் முடிந்து, தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை (டிசம்பர் 6) ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் வாயிலாக அறிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்தியா கூட்டணியில் இருக்கும் தலைவர்களுக்குக் கடிதம் மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, “நாளை நடைபெறவிருக்கும் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன். திடீரென இந்தக் கூட்டம் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதுபற்றி எனக்கு முன்கூட்டியே தெரியாததால், நான் ஏற்கனவே வடக்கு வங்காளத்தில் ஒரு நிகழ்ச்சியைத் திட்டமிட்டிருக்கிறேன். எனக்கு அங்கு ஏழு நாள்கள் நிகழ்ச்சி இருக்கிறது. எனக்குத் தெரிந்திருந்தால், நான் இந்த திட்டத்தை வைத்திருந்திருப்பேனா… ஆனால் எங்களுக்கு எந்த தகவலும் இல்லாததால், நான் வடக்கு வங்காள சுற்றுப்பயணத்துக்குச் செல்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முன்னர், மேற்கு வங்க சட்டசபையில், “காங்கிரஸ் தெலங்கானாவை வென்றுள்ளது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானிலும் வெற்றி பெற்றிருக்க வாய்ப்புகள் இருந்தன. தேர்தலுக்கு முன்னதாகவே, நாங்ள் சீட் பகிர்வு ஏற்பாடு குறித்துக் கூறினோம்.
ஆனால், காங்கிரஸ் அதைக் கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸின் வாக்குகள் பிரிந்ததால்தான் அந்த மாநிலங்களில் தோற்றார்கள்” எனப் பேசியிருந்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, “இந்தியா கூட்டணியில் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சி வேகம் பெற வேண்டும். அது வெறும் வார்த்தைகளாக இல்லாமல், செயல்களில் பிரதிபலிக்க வேண்டும். எதேச்சதிகார பா.ஜ.க-வுக்கு எதிராக அனைவரும் போராடுகிறார்கள்.

அதிக நேரம் இல்லை, எனவே, மீதமுள்ள நேரத்தை நாம் மிகச்சரியாகப் பயன்படுத்த வேண்டும், சுயநலத்தைப் புறக்கணித்து, மக்களின் நலனுக்காக நாம் உழைக்க வேண்டும். அரசியலை, ஈகோவை ஒதுக்கி வைக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் வலிமையான மற்றும் திறமையான நபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், இதுதான் மக்களுக்கு நன்மை பயக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com