இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. இதற்கிடையில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, “காங்கிரஸ் கட்சிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. மேற்கு வங்கத்தில் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம்.

ஆனால், நாங்கள் இன்னும்கூட இந்தியா கூட்டணியில்தான் அங்கம் வகிக்கிறோம். பா.ஜ.க-வை எதிர்த்துப் போரிட எனக்குச் சக்தி இருக்கிறது. ஆனால், தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் சிலர் எங்களது பேச்சைக் கேட்பதில்லை” என அதிருப்தி தெரிவித்தார். இந்த நிலையில், இன்று மேற்கு வங்கத்தின் பர்தமானிலிருந்து கொல்கத்தாவுக்கு மம்தா பானர்ஜி காரில் திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக விபத்தைச் சந்தித்திருக்கிறார். அவருக்குச் சிறு காயமேற்பட்டு, கொல்கத்தா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். இந்த விபத்து குறித்து பேசிய மம்தா பானர்ஜி, “நாங்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்புறத்திலிருந்து ஒரு வாகனம் வந்து எனது காரில் மோத முற்பட்டது.

எனது ஓட்டுநர் மட்டும் உடனடியாக பிரேக் போடாமல் இருந்திருந்தால், நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன். இந்த திடீர் பிரேக்கால், டேஷ்போர்டில் அடிபட்டுச் சிறு காயமடைந்தேன். மக்கள் என்மீது வைத்திருக்கும் அன்பால், அவர்களின் ஆசியால்தான் நான் பாதுகாக்கப்பட்டேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com