எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களில் இப்பிரச்னை இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியுடன் விரோத போக்கை கடைப்பிடித்து வரும் மம்தா பானர்ஜி, சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பா.ஜ.க-வை எதிர்த்து போரிட முடியும் என்ற ரீதியில் பேசியிருந்தார். அவரின் பேச்சு தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது போன்ற மனநிலையை காட்டியது. அவர் அளித்திருந்த பேட்டியில், “காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் 10-12 தொகுதிகள் கேட்பது நியாயமற்றது.

2014ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், 2019-ம் ஆண்டு தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. எனவே இரண்டு தொகுதிகள்தான் கொடுக்க முடியும்” என்று குறிப்பிட்டிருந்தார். இன்று அவர் அளித்துள்ள பேட்டியில், வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி அளித்துள்ள பேட்டியில், “காங்கிரஸ் கட்சிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. மேற்கு வங்கத்தில் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம். ஆனால், நாங்கள் இன்னும்கூட இந்தியா கூட்டணியில்தான் அங்கம் வகிக்கிறோம்.
அவர்கள் (ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ்) எங்களது மாநிலத்திற்கு வருகின்றனர். மரியாதை நிமித்தமாகக்கூட எங்களிடம் தெரிவிக்கவில்லை” என்று தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், “காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு வைத்துக்கொள்ளவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இரண்டு தொகுதிகள் தருவதாக எங்களது தலைவர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் 10-12 தொகுதிகள் கேட்கின்றனர்” என்றார்.
காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகள் இருக்கும் மாவட்டங்களில் மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும்படி தனது கட்சியின் மாவட்டத் தலைவர்களிடம் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சி 300 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக வெளியான செய்தி குறித்து மம்தா பானர்ஜிடம் கேட்டதற்கு, “பிராந்திய கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பு இருக்கும் தொகுதிகளை, அவர்களுக்கு காங்கிரஸ் பிரித்துக் கொடுத்துவிட்டு, 300 தொகுதிகளில் போட்டியிடலாம். இதற்கு நான் உதவ தயாராக இருக்கிறேன். ஆனால் அவர்கள் என்னவேண்டுமோ அதில் பிடிவாதமாக இருக்கின்றனர். பா.ஜ.க-வை எதிர்த்துப் போரிட எனக்கு சக்தி இருக்கிறது. ஆனால், தொகுதி பங்கீடு விவகாரத்தில் சிலர் எங்களது பேச்சை கேட்பதில்லை” என்று தெரிவித்தார்.

`பிராந்திய கட்சிகளுக்கு தேவைப்படும் நேரத்தில் காங்கிரஸ் உதவி செய்வதில்லை’ என்பது மாநில கட்சிகளின் குறையாக இருந்து வருகிறது. சமாஜ்வாடி கட்சியும் நடந்து முடிந்த மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தங்களது கட்சிக்கு தொகுதி கொடுக்காத காரணத்தால், காங்கிரஸ் கட்சிமீது கடும் அதிருப்தியில் இருக்கிறது. எனவே சமாஜ்வாடி கட்சியும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சொற்ப தொகுதிகளே ஒதுக்குவோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. மம்தா பானர்ஜி திடீரென தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருப்பது சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவிற்கு சாதகமாக அமைந்திருக்கிறது.
மம்தா பானர்ஜியை காரணம் காட்டி, `நாங்களும் தனித்துப் போட்டியிடுவோம்’ என்று காங்கிரஸ் கட்சியை மிரட்டும் சூழல் உருவாகி இருக்கிறது. “காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்கள் வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்டனர். அவர்கள் இருந்திருந்தால், பிராந்திய கட்சிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள். இப்போது தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால், பிராந்திய கட்சிகளுடனான தொடர்பு காங்கிரஸ் கட்சிக்கு குறைந்துவிட்டது” என காங்கிரஸ் தலைவர்கள் குறைபட்டுக்கொண்டுள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
நன்றி
Publisher: www.vikatan.com