அ.தி.மு.க-வில் கடந்த ஆண்டு ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்ததையடுத்து, 2022, ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். பின்னர், அ.தி.மு.க பொதுச்செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேசமயம், அ.தி.மு.க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரியும், தங்களைக் கட்சியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்கக் கோரியும் ஓ.பி.எஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்களான பி.ஹெச்.மனோஜ் பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் தீர்மானங்கள் செல்லும் எனத் தீர்ப்பளித்தார். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா, செல்லாதா என்பது குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
நன்றி
Publisher: www.vikatan.com