நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா திடீரென ரத்தான நிலையில், ரஜினிக்கு ஒரு நியாயம், நடிகர் விஜய்க்கு ஒரு நியாயமா என்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ளனர். அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீடு, வரும் 30ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், திடுதிடுப்பென இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்துள்ளதாக, தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீர்ன் நிறுவனம் அறிவித்துள்ளது. அதிக டிக்கெட் விற்பனை, போலி டிக்கெட் விற்பனை உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அரசியல் அழுத்தமே காரணம் என்று கருதும் விஜய் ரசிகர்கள், இதுதொடர்பாக ஆளுங்கட்சியை விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் லியோ இசை வெளியீடு விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
இந்த நிலையில், லியோ பட இசை வெளியீட்டு விழா விவகாரத்தில் விஜய் தரப்புக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “தம்பி விஜய்யின் லியோ பட இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கேட்டு, பின்னர் மறுக்கபட்டுள்ளது. விஜய்யின் முந்தைய இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தரப்பட்ட நிலையில், ஏன் இந்த முறை தரவில்லை.
இதற்கு காரணம் கேட்டால், ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியை சாக்குபோக்கு சொல்வார்கள். இதெல்லாம் நம்பும்படி இல்லை. இதில் நிச்சயம் அரசியல் அழுத்தம் இருக்கிறது. அரசியல் நிகழ்ச்சிகளில் அதிக கூட்டம் கூடும் என்பதால் வேறு இடத்தை தேர்வு செய்யச் சொல்வார்கள். அது போல செய்திருக்கலாம். விழாவுக்கு பாதுகாப்பு தரத்தானே அரசு இருக்கிறது. பிறகு அரசு எதற்கு, போலீஸ் எதற்கு. ஏன் என் தம்பிக்கு நெருக்கடி கொடுக்கிறீர்கள்.
ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கு பாடல் வெளியீட்டு விழாவுக்கு எப்படி அனுமதி கொடுத்தீர்கள். அதற்கு எப்படி பாதுகாப்பு கொடுத்தீர்கள்? ஏன் விஜய்யை இப்படி செய்கிறீர்கள். ரஜினிக்கு ஒரு நியாயம் விஜய்க்கு ஒரு நியாயமா? அரசியலுக்கு வருவார் என்று தெரிந்துதான் நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக பெரிய நெருக்கடி கொடுக்கப்படுகிறது” என்று சீமான் தெரிவித்துள்ளார்.
நன்றி
Publisher: 1newsnation.com