தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் எந்த வளர்ச்சிப் பணிகளையும் நிறைவேற்றவில்லை. மக்கள் இந்த ஆட்சியின்மீது மிகவும் அதிருப்தியில் உள்ளனர். தி.மு.க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர். கமிஷன், கரப்ஷன் ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாகப் பராமரிக்கப்படவில்லை. ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்கின்றனர்.

காவல்துறையினர் சுதந்திரமாக செயல்படமுடியவில்லை. பணம் கொடுத்து மக்களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என தி.மு.க நினைத்தால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடையும். தி.மு.க அமைச்சர்கள் முறைகேடாக சொத்து சேர்த்ததின் அடிப்படையில் சோதனைகள் நடைபெற்று வருகிறது. ஆதாரத்தின் அடிப்படையில்தான் சோதனை நடைபெறுகிறது. இன்னும் 6 அமைச்சர்களிடம் சோதனை நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகளால் இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். குடும்ப வன்முறை, சமூகச்சீரழிவு, பல மோதல்கள் என அடுக்கடுக்கான பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வரும் டிசம்பர் 15-ம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. தமிழகத்தில் சக மனிதர்களை மதிக்கக்கூடிய நிலைமை மாறி வருகிறது. முற்போக்கு சிந்தனை குறைந்து வருகிறது. தென் தமிழகத்தில் தொடர்ந்து பல ஆண்டாக சாதிய மோதல்கள் அதிகரித்து வருகின்றன. நாங்குநேரியில் பட்டியலின மாணவர் மீதான வன்முறை, கழுகுமலையில் மாணவர் மீதான தாக்குதல், சமீபத்தில் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு பட்டியலின இளைஞர்களை 6 பேர் தாக்கி, முகத்தில் சிறுநீர் கழித்த கொடூரமும் அரங்கேறியுள்ளது. இவை நாகரிக மனிதர்கள் செய்யும் செயலாகத் தெரியவில்லை. வளர்ந்த சமூகத்தில் இத்தகைய சம்பவங்கள் அடியோடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் என தென் மாவட்டங்களிலேயே இத்தகைய சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. இச்சம்பவங்கள் மீது மனித உரிமை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க முயல்வதில்லை. இவை எதனால் நடக்கிறது என காவல்துறைக்கு நன்கு தெரியும். ஆனாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதலுக்கு காவல்துறை முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும். இச்சம்பவங்களைக் கண்டித்து நெல்லையில் வரும் 10-ம் தேதி கண்டன பேரணி நடத்த உள்ளோம். தமிழகத்தில் சாதி ஆணவக் காதல் கொலைகள் நடைபெறுவது வருத்தம் அளிக்கிறது. உயிரை எடுப்பதற்கு பெற்றோர்களுக்கு உரிமை இல்லை. இதெல்லாம் தமிழகம் பின்னோக்கி செல்வதை காட்டுகின்றன” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com