குவிக்கப்பட்ட போலீஸ், பரிதவித்த பயணிகள்:
இந்த நிலையில் அரசின் உத்தரவையும் மீறி கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்தை இயக்காமல், வழக்கம்போல கோயம்பேட்டிலிருந்தே தங்களின் பேருந்துகளை இயக்க ஆம்னி பேருந்து உரிமையாளர் முயற்சி செய்தனர். இதைத் தடுக்கும் விதமாக கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தின் முன்பாக 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு, ஆம்னி பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் தடுப்புகளால் அடைக்கப்பட்டு, காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்-ஓட்டுநர்களுக்கும் காவல்துறை-சி.எம்.டி.ஏ அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் களேபரம் வெடித்தது. கோயம்பேட்டிலிருந்து ஏற்கெனவே டிக்கெட் புக்கிங் செய்து காத்திருந்த பயணிகள் வலுக்கட்டாயமாக கிளாம்பாக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், தென்மாவட்டங்களிலிருந்து கிளாம்பாக்கத்தைத் தாண்டி சென்னை பெருநகருக்குள் கோயம்பேட்டை நோக்கி வந்த ஆம்னி பேருந்துகளும் காவல்துறையினரால் இடைமறிக்கப்பட்டு, பாதிவழியிலேயே கிளாம்பாக்கத்துக்கு திருப்பிவிடப்பட்டன. இதனால் பயணம் மேற்கொண்ட பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். இவை தவிர, தை பூசம், குடியரசு தினம், வார இறுதிநாட்கள் என தொடர் விடுமுறையைக் கழிக்க தங்கள் ஊருக்குச் செல்ல முற்பட்டிருக்கும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகின்றனர். குறிப்பாக, கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கத்துக்கு பயணம் மேற்கொள்ள ஆட்டோ, கார்களில் சுமார் ரூ.500 முதல் ரூ.1500 வரை கட்டணம் கேட்பதாகவும் கண்ணீர் வடிக்கின்றனர்.

எதிர்கட்சிகள் கண்டனம்:
இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தொடர் விடுமுறையால் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் பேருந்துகள் முன்பதிவு செய்து கோயம்பேடு வந்தடைந்துள்ள வேளையில் காவல்துறையை வைத்து பேருந்துகள் உள்ளே-வெளியே செல்ல இயலாத வகையில் தடுப்புகளை அமைத்துள்ளனர். முன்பதிவு செய்து பேருந்து நிலையம் வந்த பயணிகளை ‘உள்ளே போகாதீர்கள்!பேருந்து இங்கிருந்து இயங்காது! ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் கிளாம்பாக்கம் செல்லுங்கள்’..என மக்களை குழப்பத்திற்கு ஆளாக்கி மிரட்டி வருகின்றனர். இந்த அரசு மக்களை பாதிப்புக்குள்ளாக்க வேண்டும் என திட்டமிட்டே இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது… கருணாநிதி பெயரில் கட்சி சின்ன வடிவில் பேருந்து நிலையம் கட்டினால் போதாது. அடிப்படை வசதிகள் வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கை! திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகளை இன்னும் பிடிக்க முடியவில்லை. அப்பாவி மக்களையும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களையும் மிரட்ட 500 போலிஸ் குவிப்பு! முன்னறிவிப்பும் முன்னேற்பாடும் இல்லாத முட்டாள் அரசு!” என கடுமையாகத் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்திருக்கிறார்.
அமைச்சர் சொன்ன விளக்கம்:
இந்த நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்புக்கு 90% பேர் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றனர். ஓரிரு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தேவையின்றி பேசுவதை தவிர்த்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும். கோயம்பேட்டை விட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. மார்ச் மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் முழுமையாக தயராகிவிடும். ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில் தேவையற்ற வதந்திகளை பரப்பி குழப்பங்களை ஏற்படுத்தினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்!” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
