INDIA Bloc: தலைவரான கார்கே; ஒருங்கிணைப்பாளர் பதவியை

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து `இந்தியா’ கூட்டணியை அமைத்திருக்கிறார்கள். இதில் காங்கிரஸ், தி.மு.க, ஜனதா தளம், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் என 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இதன் முதல் கூட்டம் கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி பீகார் மாநிலம், பாட்னாவில் நடைபெற்றது. அப்போது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமை வகித்தார். அடுத்தடுத்த கூட்டங்கள் பெங்களூர், மும்பை, டெல்லியில் நடைபெற்றது. இறுதியாக நடந்த கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கே பெயரை பரிந்துரை செய்தார்.

நிதிஷ் குமார்

அப்போது, “பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமாரின் வாய்ப்புகளை பறிக்கவே மம்தா முயற்சி செய்து வருகிறார். இது நிதிஷ் குமார் தரப்புக்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறது” என நிதிஷ் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். முன்னதாக இந்த கூட்டத்தில் ‘நிதிஷ் குமார் இந்தியில் பேசியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும்’ என டி.ஆர்.பாலு கூறினார். மறுபுறம் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறக்கூடும் என்ற தகவல் வெளியானது.

இந்த சூழலில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, ஸ்டாலின், கனிமொழி, நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் பங்கேற்கவில்லை. முன்னதாக அதிருப்தியில் இருக்கும் நிதிஷ்க்கு கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த பதவியை நிதிஷ் குமார் நிராகரித்துவிட்டார். இதையடுத்து கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த ஜே.டி.யு தலைவர் சஞ்சய் குமார் ஜா, “இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பதவி, காங்கிரஸிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று முதல்வர் (நிதிஷ் குமார்) விரும்பினார்” என தெரிவித்தார்.

இந்தியா கூட்டணி தலைவர்கள்

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருக்கும் காங்கிரஸ் தலைவர் கார்கே, “இந்தியா கூட்டணியின் தலைவர்கள் இன்று இணையத்தில் சந்தித்து கூட்டணி குறித்து பயனுள்ள விவாதம் நடத்தினர். சீட் பங்கீடு பேச்சுவார்த்தை சாதகமாக நடந்து வருவதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் நாள்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து விவாதித்தோம். மேலும் ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ நியாய யாத்ரா’வில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் தங்களின் வசதிக்கு ஏற்ப இணைய வேண்டும். அதன் மூலமாக நாட்டின் நிலவும் சாமானிய மக்களைப் பிடித்துள்ள சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்னைகளை எழுப்புவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் ராகுல் காந்தி அழைப்பு விடுத்தார்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை நிதிஷ் குமார் மறுத்திருக்கிறார். கார்கேவை தலைவராக தேர்வு செய்திருக்கிறார்கள். இந்தியா கூட்டணியில் ஈகோ, கருத்து முரண்பாடு கொண்ட பல்வேறு கட்சிகள் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்காக ஒன்றிணைந்திருக்கிறார்கள். அந்த நோக்கத்தில் முன்னேறும்போது பல்வேறு தடைகள் வரும். நிதிஷ் குமார் போன்ற தலைவர்களுக்கு பல ஆசைகளும், பிடிக்காத விஷயங்களும் இருக்கலாம். ஆனால் அவர் இந்தியா கூட்டணி வலுவாக இருக்க வேண்டும். மோடிக்கு எதிராக ஒற்றை தலைவரை நியமிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். எனவே அவர் விலகி செல்வதற்கு வாய்ப்பு இல்லை.

ப்ரியன்

அவர் தான் கூட்டணியை தொடக்கி வைத்தவர். கூட்டணியில் காங்கிரஸ்தான் பெரிய கட்சி. கார்கேவை தலைவராக நியமித்ததில் எந்த தவறும் இல்லை. ஆனால் ஒருங்கிணைப்பாளர் பதவியை நிதிஷ் குமார் ஏற்று இருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யாதது இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை என பா.ஜ.க பிரசாரம் செய்ய வசதியாக இருக்கும். அனைத்து கட்சிகளுடனும் நட்பில் இருப்பதால்தான் அவருக்கு அந்த பதவி கொடுத்திருப்பார்கள். ஆனால் அவர் மறுத்திருக்கிறார். இதுபோன்ற சர்ச்சைகளுக்கு வாய்ப்பு கொடுத்தால் அவர்களுடைய வெற்றிக்கு பாதிப்பு ஏற்படும். எனவே வரும் காலங்களில் இதை தலைவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *