ஜில் மாவட்ட காவல் அதிகாரி தூக்கியடிக்கப்பட்டதற்கு உள்ளூர் உடன்பிறப்புகளும், மன்னர் புள்ளியும்தான் காரணம் என்கிறார்கள் காக்கி வட்டாரத்தில். ஏற்கெனவே ஆளும் தரப்புடன் ஒத்துப்போகாத அவர், தி.மு.க கூட்டங்கள், கலைஞர் நூற்றாண்டு கொண்டாட்டங்கள், போஸ்டர்,ஃபிளெக்ஸ் எல்லாவற்றுக்கும் அனுமதி கொடுப்பதில் அநியாயத்துக்கு விரைப்பு காட்டினாராம். ஆனால், காவிக் கட்சியின் மாஜி காக்கியின் நிகழ்ச்சிக்கும், அந்தக் கட்சியின் மத்திய அமைச்சர் நிகழ்ச்சிக்கும் உடனுக்குடன் அனுமதி கொடுத்ததோடு, கட்டுப்பாடுகளையும் காற்றில் பறக்கவிட்டாராம். இதைச் சமயம் பார்த்து முதன்மையானவரிடம் போட்டுக்கொடுத்திருக்கிறார் மன்னர் புள்ளி. ‘சூரியனை சுள்ளுன்னு சுட்டா தாமரை மலருமா… கை சுடுமான்னு இப்ப அந்த அதிகாரிக்கு நல்லாப் புரிஞ்சிருக்கும்’ என்று நக்கலாகச் சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்.
‘நான் ஒரு தலித் பெண் என்பதால் சாதியரீதியிலும், பாலினரீதியிலும் ஒடுக்கப்பட்டேன்’ என்ற பகிரங்கக் குற்றச்சாட்டுடன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, புதுவை அரசியலில் புயலைக் கிளப்பினார் சந்திர பிரியங்கா. இந்த விவகாரத்தைவைத்து ஒரு வாரமாக காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எல்லா எதிர்க்கட்சியினரும் முதல்வர் ரங்கசாமியைத் தூங்கவிடாமல் செய்கிறார்கள். கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க புள்ளிகள் சிலரும், சந்திர பிரியங்காவின் குற்றச்சாட்டை தேசிய பட்டியலின ஆணையத்துக்குப் புகாராகத் தட்டிவிட்டிருக்கிறார்களாம்.
இந்த இம்சை போதாது என்று சந்திர பிரியங்காவும், ‘என் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார் என்று காத்துக்கொண்டிருக்கிறேன். அதன் பிறகு ஆதாரங்களுடன் நான் பொது மேடையில் பேசுவேன்” என்று தன்னுடைய ஆதரவாளர்களிடம் சொல்லிவருகிறாராம். இப்படி நாலா பக்கமும் ராஜினாமா அரசியலே சுற்றிச் சுழன்றடிப்பதால், ‘இருக்குற பிரச்னையில இது வேறயா?’ என விழிபிதுங்கி நிற்கிறாராம் முதல்வர் ரங்கசாமி.
பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட மறுகணமே சிறுபான்மையினருக்காகக் களமாடத் தொடங்கிவிட்ட எடப்பாடி பழனிசாமி, இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை தொடர்பாக சட்டமன்றம் வரையில் பேசினார். அதைத் தொடர்ந்து, ‘வேலூர் சிறைக்குள் இஸ்லாமிய கைதிகளுக்கான வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இஸ்லாமிய சிறைவாசிகள் தொழுகை நடத்தும் மசூதி மட்டும் மூடிவைக்கப்பட்டிருக்கிறது’ என்று குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டார். ‘இந்தக் குற்றச்சாட்டு விஷமத்தனமானது’ என்று சிறைத்துறை டி.ஜி.பி அம்ரேஷ் புஜாரி விளக்கம் கொடுக்க, அந்த ‘விஷமத்தனம்’ என்ற வார்த்தை எடப்பாடியின் ஈகோவை வெகுவாகச் சீண்டிவிட்டதாம்.

கூடவே சிறைத்துறை அமைச்சர் ரகுபதி, ‘முதலமைச்சராக இருந்த எடப்பாடி, வேலூர் சிறைக்கு இதுவரை போகவில்லை என்று நினைக்கிறேன். இனிமேல்தான் போகப்போகிறார்’ என்று அறிக்கைவிட்டது எடப்பாடியை மேலும் கடுப்பாக்கிவிட்டதாம். ‘நேரம் வரும்போது அந்தச் சிறை அதிகாரியைப் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கடுகடுத்த எடப்பாடி, ‘சிறுபான்மையினர் பற்றி நாம் பேசினால் தி.மு.க-வினருக்குக் கோபம் வருகிறது என்றால், அதையே திரும்பத் திரும்பச் செய்யுங்கள்’ என்று கட்சியினருக்கும் கட்டளையிட்டிருக்கிறாராம்.
அடாவடிக்குப் பெயர் போன ஆவடி புள்ளியின் மாண்புமிகு பதவியைப் பறித்த மேலிடம், அவரது வாரிசின் கட்சிப் பதவியையும் காலி செய்தது. இதனால், கட்சி நிகழ்ச்சியைத் தவிர வேறு எங்குமே தலை காட்டாமல் இருவரும் ஒதுங்கியே இருந்தனர். இந்த நிலையில், ‘பழைய துறை மீண்டும் உங்கள் கைக்கு வர வாய்ப்பு இருக்கிறது’ என்று மேலிடத்துக்கு நெருக்கமானவர்கள் தூபம்போட, குஷியில் துள்ளிக்குதிக்கிறாராம் கல்லெறி வீரர்.
அதேபோல, மாநகராட்சிப் பணி முதல் ரியல் எஸ்டேட் பணிவரை எல்லாவற்றிலும் ஒதுங்கியிருந்த வாரிசுப் புள்ளி, மீண்டும் வெளியில் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறாராம். உஷாரான உள்ளூர் உடன்பிறப்புகள், இந்தத் தகவலை உடனே மேலிடத்துக்குப் போட்டுக்கொடுத்துவிட்டார்களாம்.
திருச்சி, ராமநாதபுரம், திருப்பூரைத் தொடர்ந்து தி.மு.க வாக்குச்சாவடி முகவர்களுக்கான அடுத்த கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெறவிருக்கிறது. ஒவ்வொரு கூட்டத்தையும் ஒவ்வொரு அமைச்சர் பொறுப்பெடுத்து நடத்தியதுபோல, திருவண்ணாமலை கூட்ட ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலுதான் கவனிக்கிறார். இதையடுத்து சென்னையில் கூட்டம் நடத்த தலைமை முடிவு செய்திருக்கிறது.

தலைநகரில் மா.சு., சேகர் பாபு, உதயநிதி என மூன்று அமைச்சர்கள் இருந்தும், கூட்டத்துக்கு யார் பொறுப்பேற்பது என்பதில் இன்னும் முடிவு எட்டப்படவில்லையாம். ‘உதயநிதி கணக்கில் வர மாட்டார். மற்ற இருவரும் காட்டுகிற அமைதி தலைமைக் கழகத்தைச் சங்கடத்துக்கு ஆளாக்கியிருக்கிறதாம். ஏற்கெனவே முதல்வரின் பிறந்தநாள் மாநாடு, கலைஞரின் நூற்றாண்டுக் கூட்டம், கனிமொழியின் மகளிர் மாநாடு என அதிகமாக செலவழித்தாகிவிட்டது… இனியும் தாங்காது என்று இரண்டு அமைச்சர்களும் நழுவும் மனநிலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com