தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019-ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். அந்தக் கட்சியின் விதிமுறைகளின்படி, மாநிலத் தலைவராக நியமனம் செய்யப்படுபவர் மூன்று ஆண்டுகள் மட்டுமே அந்தப் பதவியில் நீடிக்க முடியும். இதன்படி 2022-ம் ஆண்டு பிப்ரவரியுடன், கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் நிறைவடைந்துவிட்டது. இதையடுத்து புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அந்தக் கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர்.

அதற்குள் தலைமையில் ஏற்பட்ட குழப்பம், அகில இந்தியத் தலைவருக்கான தேர்தல், கர்நாடக மாநிலத் தேர்தல் போன்றவற்றால் அழகிரி மாற்றம் கிடப்பிலேயே இருந்தது. இதற்கிடையில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் புதிய தலைவரை நியமனம் செய்ய டெல்லி முடிவு செய்திருந்தது. அந்த பதவியைப் பிடிக்க ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், செல்லகுமார், ரூபி மனோகரன், செல்வப்பெருந்தகை, சசிகாந்த் செந்தில் ஆகியோருக்கிடையில் கடுமையான போட்டி நிலவுகிறது.
இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் மூலமாக ஜோதிமணியும், கிருஷ்ணகிரி எம்.பி செல்லகுமாரும், பிரியங்கா காந்தி மூலமாக கார்த்தி சிதம்பரமும், கார்கே மூலமாக செல்வபெருந்தகையும் காய் நகர்த்தி வருகிறார்களாம். இதற்கு அடுத்ததாக சசிகாந்த் செந்தில், மாணிக்கம் தாகூர், விஜயதரணி என ஒரு டஜன் பேர் ரேஸில் இருக்கிறார்கள். அழகிரியும் தனது பங்கிற்கு பதவியை நாடாளுமன்ற தேர்தல் வரையில் தக்கவைத்துக்கொள்ள தேவையான வேலைகளை செய்து வருகிறார்.

இதன் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக சத்தியமூர்த்தி பவனில் உச்சகட்ட பரபரப்பு சூழ்ந்திருக்கிறது. இதற்கிடையில் டெல்லிக்கு விமானத்தில் பறந்திருக்கிறார், கார்த்தி சிதம்பரம். அங்கு இன்று முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான ரேஸ் சூடுபிடித்திருக்கிறது என்கிறது கதர் வட்டாரம்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், “பரபரப்பான சூழலுக்கு மத்தியில் கார்த்தி சிதம்பரம் டெல்லிக்கு செல்கிறார். சோனியாகாந்தி, ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பிறகு புதிய தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம். கார்த்தி சிதம்பரத்துக்கு பொறுப்பு கொடுப்பதற்கு அதிக வாய்ப்புகளும் இருக்கின்றன.

இருப்பினும் செல்லகுமார், ஜோதிமணி, செல்வப்பெருந்தகை ஆகியோரும் டஃப் கொடுத்து வருகிறார். தனது பங்கிற்கு அழகிரியும் நாடாளுமன்ற தேர்தல் வரையில் இருந்து கொள்கிறேன் என கோரிக்கை வைத்திருக்கிறார். எனவே அறிவிப்பு வெளியான பிறகே இந்த குழப்பத்துக்கு தீர்வு கிடைக்கும்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com