2001 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஓ.பி.எஸ்., வருவாய்த்துறை அமைச்சராகப் பதவியேற்றார். டான்சி வழக்கில் சிறைத் தண்டனை உறுதிசெய்யப்பட்டதால், ஜெயலலிதாவிடமிருந்து முதல்வர் பதவி பறிபோனது. அதனால், தமிழ்நாட்டின் திடீர் முதல்வரானார் ஓ.பி.எஸ். பிறகு, மீண்டும் ஜெயலலிதா முதல்வரான பின்னர், பொதுப்பணித்துறை அமைச்சராக ஓ.பி.எஸ் பதவிவகித்தார். 2006-ல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அப்போது, மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், ஓ.பி.எஸ், அவரின் குடும்பத்தினர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.


ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட அந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட முதல் நபராக ஓ.பி.எஸ் சேர்க்கப்பட்டார். அவருடன் அவரின் மனைவி விஜயலெட்சுமி, மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா, ராஜாவின் மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன் மற்றும் அவரின் மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டனர்.
தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. 2009 ஜூலை 30-ம் தேதி, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘2001 சட்டமன்றத் தேர்தலின்போது ஓ.பி.எஸ் கணக்கில் காட்டிய சொத்து மதிப்பு, 17 லட்சத்து 44 ஆயிரத்து 840 ரூபாய். தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று, வருவாய்த்துறை அமைச்சர், முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர் என பதவிகள் வகித்த ஐந்து வருடங்களில், ஓ.பி.எஸ்ஸின் சொத்து மதிப்பு ஒரு கோடியே 77 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. அதாவது, ஐந்து ஆண்டுகளில் 374 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது’ என்று குற்றம்சாட்டப்பட்டது. 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை நடைபெற்ற அ.தி.மு.க ஆட்சியில் முதலமைச்சராகவும், வருவாய்த்துறை அமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.
நன்றி
Publisher: www.vikatan.com