தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, சோதனைகள் நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது. இந்நிலையில், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான விவரங்கள், ஆதார் அட்டை விவரங்களுடனும் ஆஜராகும்படி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இந்த சம்மன்களை ரத்து செய்யக் கோரி தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் நேற்று(27.11.23) விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, “சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில் சேர்க்கப்படாத சட்டத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடியாது. சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக விசாரணை நடத்துவது மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது. அமலாக்கத்துறையின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கனிம வள குற்றங்கள் தொடர்பாக மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க முடியாது. அமலாக்கத்துறை ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு விதமாக செயல்படுகிறது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதை அமலாக்கத்துறையும் மறுக்கவில்லை. குவாரி உரிமைதாரர் தவறுக்கு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடியுமா? யூகங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த முடியாது. பல மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களை கேட்டுப் பெறலாம். விசாரணைக்கு உதவும்படி கோரலாம். சம்மன் அனுப்ப முடியாது. மணல் கொள்ளை பற்றி விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை. மாநில அரசு விவகாரங்களில் தலையிடும் வகையில் அனுப்பப்பட்டுள்ள சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும்” என்றார்.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. கனிம வள சட்டம் மட்டுமல்லாமல், இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளை சமர்ப்பிக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். சில விவரங்களை கேட்கப்பட்டது. அவை வழங்கப்படவில்லை. விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது. 4,500 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்பந்தமான விவரங்கள், விசாரணைக்கு உதவியாகத் தான் கேட்கப்பட்டது” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பிறகு எதற்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு உதவி செய்ய கேட்பதும், சம்மன் அனுப்புவதற்கும் வித்தியாசம் உள்ளது. சம்மன் அனுப்பியதில் உள்நோக்கம் இருக்கிறது. என்ன ஆதாரம் உள்ளது” எனக் கேள்வி எழுப்பினர்.
அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “தற்போது சம்மன் அனுப்பப்பட்டவர்கள் யாரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல. விசாரணை தான் நடக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் சட்டவிரோத குவாரி நடப்பதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக மாநில அரசு கூறியிருக்கிறது. மாநில அரசு விசாரிப்பதை தடுக்கவில்லை. கனிம வள சட்ட வழக்குகளை அமலாக்கத்துறை விசாரிக்கவில்லை. மோசடி, ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதால் தான் விசாரணை நடத்தப்படுகிறது. அதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. இந்த விசாரணையை மாநில அரசு தடுக்க முடியாது. செயற்பொறியாளர் ஒருவர் ஊழல் நடைபெற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். ஆதாரங்களை சேகரிப்பதற்கான விசாரணை தான் இது ” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அனைத்து குவாரிகளின் விவரங்களை எப்படி கேட்க முடியும். சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ள வழக்குகளின் விவரங்களை மட்டும் கேட்கலாம். அந்த தகவல்களை தராவிட்டால் வழக்கு தொடரலாம்” என்றனர்.
இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “இந்த சட்டவிரோத மணல் விற்பனை மூலம் கிடைத்த பணம் குறித்து அமலாக்கத்துறை விசாரிக்க முடியும். ஏன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை அரசு பாதுகாக்க முயற்சிக்கிறது” என்றார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தவே, “அரசு யாரையும் பாதுகாக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது ஏன்?” என்றார்.
தொடர்ந்து பேசிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், “அமலாக்கத்துறையிடம் சாட்சியம் அளித்த அரசு அதிகாரி, சட்டவிரோத மணல் கொள்ளை நடந்துள்ளதாகவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும்” தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு மீதான உத்தரவை இன்று வழங்குவதாக தெரிவித்தனர். இதற்கிடையே அமலாக்கத்துறை ஆட்சேபனை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அதில், “அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் சட்டவிரோதமாக மணல் குவாரிகளில் மணல் அள்ளப்பட்டதால், நீர்வளத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டும். இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை நீர்வளத்துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
விசாரணைக்கு ஆஜராகி இருந்த அதிகாரி ஒருவர், ஒரு மாதத்துக்கு மேல் தலைமறைவான நிலையில், அண்மையில், அமலாக்கத்துறை முன் ஆஜரான அவர், திருவள்ளூர் மாவட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம் என்பவர் தன்னை தொடர்பு கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி, செல்போனை அணைத்து வைத்து விடும்படி அமைச்சர் துரைமுருகன் மற்றும் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆகியோர் அறிவுறுத்தியதாக வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.
அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி என்பவர், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டாம் என அரசு அதிகாரி ஒருவரிடம் மறைமுகமாக தெரிவித்ததாகவும், அதையும் மீறி தான் விசாரணைக்கு ஆஜராகி உள்ளதாகவும் அந்த அதிகாரி கூறி உள்ளார்.

அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் அளித்த மேலும் சில அதிகாரிகள், அனுமதிக்கப்பட்ட அளவைவிட சட்டவிரோதமாக அதிக அளவில் மணல் அள்ளுவது தெரிந்தும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என அழுத்தம் கொடுத்ததால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுக்கு கட்டுப்படுவதை தவிர வேறு வழி இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக மணல் கொள்ளையை அனுமதித்ததன் மூலம், தவறு செய்து விட்டதாக கூறிய நீர்வளத்துறை அதிகாரிகள், மணல் கொள்ளைக்கு மாவட்ட நிர்வாகமும் பொறுப்பு என கூறி உள்ளனர்” என அந்த மனுவில் அமலாக்கத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோல், “உரிமம் பெற்றுள்ள 28 சுரங்கங்களிலும் அமலாக்கத்துறையின் நிபுணர் குழுவின் மூலம் ஆய்வு நடத்தியதில், 195.37 ஹெக்டேர் பரப்பளவில் அனுமதிக்கப்பட்ட பகுதிக்கு மாறாக, 987.01 ஹெக்டேர் நிலப்பரப்பில் மண் அள்ளப்பட்டுள்ளது எனவும், நீர்வளத்துறை ஆவணங்களில், 4.05 லட்சம் யூனிட் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள போதும், 27.70 லட்சம் யூனிட் மணல் அள்ளப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் கடந்த 2 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மணல் மூலம் கிடைத்த வருவாய் 4 ஆயிரத்து 730 கோடியாக உள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்பதால் சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களின் பெயரை குறிப்பிடப்படவில்லை என அமலாக்கத்துறை மனுவில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அமர்வு இன்று அளித்த தீர்ப்பில், மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.
அதே நேரம் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை இல்லை. அமலாக்கத்துறையின் ஆட்சேபனை மனுவுக்கு அரசும், மாவட்ட ஆட்சியர்களும் விளக்கமளிக்க 3 வாரம் அவகாசம் அளித்து வழக்கு டிசம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. வழக்கு குறித்து குறுகிய காலத்தில் பதில் அளித்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
