கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து களமிறங்கிய மதச்சார்பற்ற ஜனதா தளம் படுதோல்வியைச் சந்திக்கவே, 2024 தேர்தலிலும் தனித்துதான் களமிறங்குவோம் என்று கூறிவந்தது. ஆனால், சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நான்கு மாதங்களிலேயே, மதச்சார்பற்ற ஜனதா தளம், பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையப்போவதாகப் பேச்சுகள் அடிபட்டது. அதற்கேற்றாற்போலவே, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தேவகவுடா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும், பிரதமர் மோடி, அமித் ஷா-வையும் நேரில் சந்தித்துவந்தார்.


இருப்பினும் அதிகாரபூர்வ செய்திகள் எதுவும் வெளிவராத நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வரும், பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான எடியூரப்பா, கூட்டணியை உறுதிப்படுத்தும் விதமாக, “தேவகவுடா மோடியைச் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களுக்கு 4 சீட் என்பது ஏற்கெனவே முடிவாகிவிட்டது” என்று இந்த மாத தொடக்கத்தில் கூறியிருந்தார். ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி, எடியூரப்பா கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து என்று கூறினார்.
நன்றி
Publisher: www.vikatan.com