உலகம் முழுவதும் AI கோலோச்சத் தொடங்கிவிட்டது. அதிலும் குறிப்பாக சாட் ஜிபிடி வெற்றிக்குப் பிறகு AI கருவிகள் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டன. பல புதிய புதிய AI கருவிகள் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் ஆய்வுகளுக்கும் நிதியும் குவிந்து வருகிறது. அதேநேரம் மற்றொருபுறம் AI துறையால் பெரிய ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையும் அதிகரித்தே வருகிறது.

சமீபத்தில், AI துறையில் பல ஆண்டு அனுபவம் கொண்ட, இந்த ஆண்டு கூகுள் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற, AI துறையின் காட்பாதர் என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன், “எதிர்வரும் காலத்தில் AI துறையால் மிகப் பெரிய ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, AI என்று வரும் போது அரசும் சரி, பெரும் நிறுவனங்களும் சரி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என எச்சரித்திருந்தார். இந்த நிலையில், AI துறையை ஒழுங்குபடுத்துவதற்கான நிர்வாக உத்தரவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று வெளியிட்டு, அதன் கொள்கையை அறிமுகப்படுத்தினார்.
அப்போது பேசிய அவர், “AI சாதனங்கள் மக்களை ஏமாற்றப் பயன்படுத்தப்படுகின்றன. ஏஐ மூலம் உருவாக்கப்படும் ஆடியோ, வீடியோ-க்கள் ஒருவரின் நற்பெயரைக் கெடுக்கும் போலி செய்திகளைப் பரப்பவும், மோசடி செய்யவும் பயன்படும் சூழல் நிலவுகிறது. உங்கள் குரலை மூன்று வினாடிகள் பதிவு செய்தாலே போதும்…. அப்படிதான் நான் பேசியதாக ஒரு வீடியோ வெளியானது. அதில், நான் சொல்லாததை நானே சொன்னது போல வீடியோ இருந்தது. அதனை கேட்ட போது, `நான் எப்போது இப்படி பேசினேன்?’ எனக் கேட்டேன்.

எனவே, இந்த நுண்ணறிவு சாதனத்தின் பாதுகாப்பும், புதிய தரநிலைகளை நிறுவுவதும் அமெரிக்கர்களின் தனி உரிமையைப் பாதுகாக்கும் என்ற அடிப்படையில், AI உருவாக்குநர்கள் தங்கள் பாதுகாப்பு சோதனை முடிவுகள் மற்றும் பிற முக்கியமான தகவல்களை அமெரிக்க அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். AI மூலம், பாதுகாப்பு – உற்பத்தி சட்டத்தின்படி, தேசியப் பாதுகாப்பு, தேசிய பொருளாதார பாதுகாப்பு, தேசிய பொதுச் சுகாதாரம் – பாதுகாப்பு ஆகியவற்றுக்குக் கடுமையான ஆபத்து ஏற்படுத்தும் சூழல் நிலவுவதால், AI உருவாக்கும் நிறுவனங்கள், தங்களின் பயிற்சிகள் குறித்தும், சோதனைகளின் முடிவுகள் குறித்தும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் AI அமைப்புகள் பாதுகாப்பானவை மற்றும் நம்பகமானவை என்பதை பொதுவில் வெளியிடுவதற்கு முன் உறுதி செய்யும். மேலும், AI -யால் உருவாக்கப்படும் வீடியோ – ஆடியோ உள்ளிட்டவற்றுக்கு லேபில், வாட்டர் மார்க் போன்றவை மூலம் அடையாளப்படுத்தும் வழிகாட்டுதலை வர்த்தகத் துறை விரைவில் உருவாக்கவிருக்கிறது. இதனால், அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் தங்கள் அரசிடமிருந்து பெரும் தகவல்கள் உண்மையானவைதானா என்பதை எளிதாக அறிந்து கொள்ளமுடியும்.

அதன் மூலம், அரசு பொதுமக்களின் சிவில் உரிமைகளை மேம்படுத்தி, நுகர்வோர் மற்றும் தொழிலாளர்களுக்குப் பக்கபலமாக நிற்கும். புதுமை மற்றும் போட்டியை ஊக்குவித்து, உலகம் முழுவதும் அமெரிக்காவின் தலைமையை மேம்படுத்தும். இந்த கருவிகளைப் பயன்படுத்தும் உலகெங்கிலும் உள்ள அரசுகளுக்கு அமெரிக்கா ஒரு முன்மாதிரியாக இருக்கும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com
