சென்னையில் கொட்டிய கனமழையைப் போலவே, தென்தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாகக் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் இந்த மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 16-ம் தேதி நள்ளிரவு தொடங்கிய மழை, விடாமல் பெய்ததால் பல மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் மட்டும் 24 மணிநேரத்தில் 95 செ.மீ மழைப் பதிவாகியிருந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் 50 செ.மீ மழைப் பதிவாகியிருக்கிறது.

இப்போது மழை ஓய்ந்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே இதுபோன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் தொடர்ந்துவருவதற்குப் புவி வெப்பமடைதலால் வானிலை மோசமடைவதே காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்டுவரும் அமைச்சர் மனோ தங்கராஜ், தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்குப் பிறகு, நமது வானிலை ஆய்வுத் துறையின் செயல்பாடுகளையும், இதுபோன்ற இயற்கை பேரழிவுகளுக்கு நமது கூட்டுப் செயல்பாடுகளின் பிரதிபலிப்பையும் சிந்தித்துப் பார்ப்பது அவசியம்.
இந்த நெருக்கடியைச் சமாளிக்கத் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டாலும், இந்த இயற்கைப் பேரிடரின் எதிர்பாராத தீவிரம் மற்றும் தாக்கத்தை, இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) மிகவும் துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் முன்னறிவிப்புகளைச் செய்திருந்தால் குறைக்கப்பட்டிருக்கலாம். வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைக்கும், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்குமிடையே மிகவும் குறைவான நேரமே இருந்தது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சில சிக்கல்கள் தொடர்கின்றன.

எனவே, துல்லியமான வானிலை எச்சரிக்கையின் அவசியத்தை இந்த நிகழ்வு உணர்த்துகிறது. மேற்கத்திய நாடுகளில் இருப்பது போன்ற கன மழையைத் தொடர்பாக மிகவும் துல்லியமான முன்னறிவிப்புகள் இங்கு இல்லை. மிகவும் துல்லியமான எச்சரிக்கைகள் மூலம், சொத்து சேதத்தின் அளவைக் குறைத்திருக்கலாம், மேலும் சில அசாதாரண சூழலைத் தவித்திருக்கலாம். வெப்பமண்டல நாடுகளில் இது போன்று கணிப்பது சற்று கடினமானது என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால், இந்த ஏற்றத்தாழ்வு நமது தயார்நிலையையும், வெள்ளத்திற்கான முன்னேற்பாடுகளையும் பாதிக்கும்.
இத்தனை சவால்கள் இருந்தபோதும், இது குறை சொல்வதற்கான நேரமில்லை. எனவே, அனைவருடனும் கூட்டு முயற்சியால் அடுத்தகட்ட நடவடிக்கைக்கான நேரம் இது. இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு தன்னால் முடிந்ததைச் செய்திருக்கிறது. இந்த மழை, வெள்ள நிகழ்வுகள் எல்லாம், காலநிலை மாற்றத்தின் தீவிரமான எச்சரிக்கையாக உணர்ந்துகொள்ள முடிகிறது. இது ஒரு உலகளாவிய பிரச்னை. தற்போது இந்தியாவை நேரடியாகப் பாதிக்கிறது. எனவே, மத்திய அரசின் அணுகுமுறையை மறுசீரமைத்து, செயலூக்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும், வானிலை ஆய்வு மையத்தின் தகவல் தொடர்பு அமைப்புகளை மேம்படுத்தி, இத்தகைய பேரழிவுகளை முன்னறிவிப்பதற்கும் அவற்றை நிர்வகிப்பதற்கும், இது போன்ற ஆபத்துகளின் விளைவுகளைக் குறைப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும். இது நம் அனைவரின் ஒருங்கிணைந்த பொறுப்பு. தற்போது செயலுக்கான நேரம், இந்த சவாலை ஒன்றாக எதிர்கொள்ள நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com