தாக்குதல் ஆரம்பித்த முதல் இரண்டு வாரங்களிலேயே காஸாவில் கிட்டத்தட்ட 5,000 கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ‘வடக்கு காஸாவில் 15% கட்டடங்கள் மனிதர்கள் வசிக்கத் தகுதியற்றவை ஆகிவிட்டன’ என்று ஐ.நா கூறியுள்ளது. ஏற்கெனவே காஸாவில் பலர் வீடற்றவர்களாக அகதிகள் முகாம்களில் இருக்கிறார்கள். ‘நெரிசலான அந்தப் பகுதியில் வசிக்கும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேரின் வீடுகளில் ஜன்னல்கள், கதவுகள், பாதுகாப்பான கூரை என்று எதுவும் இல்லை’ என ஐ.நா அகதிகள் பராமரிப்பு அமைப்பு கூறுகிறது. ஏற்கெனவே அங்கு 72 ஆயிரம் வீடுகள் போரால் நொறுங்கியிருந்தன. இம்முறை தாக்குதலில் இன்னும் பல ஆயிரம் வீடுகள் நொறுங்கிவிட்டன. ஒவ்வொருமுறையும் இஸ்ரேலின் குண்டு தாக்குதலில் வீடுகள் நொறுங்குவதும், திரும்பக் கட்டப்படுவதும், அடுத்த தாக்குதலில் அவை நொறுங்குவதும் தொடர்கதை ஆகிவிட்டது. The Global Shelter Cluster என்ற அமைப்பு, ‘காஸாவில் வசிக்கும் எல்லோருக்கும் வீடுகள் கிடைக்க வேண்டுமென்றால், இன்னமும் 1 லட்சத்து 20 ஆயிரம் வீடுகளைக் கட்ட வேண்டும்’ என்று முன்பு கூறியிருந்தது. இஸ்ரேலின் தாக்குதல் இந்தத் தேவையைப் பல மடங்கு அதிகரிக்கலாம்.
காஸா மக்களின் துயரம் 1967-ம் ஆண்டு ஆரம்பித்தது. எகிப்தின் வசமிருந்த காஸா பகுதியை அந்த ஆண்டில் இஸ்ரேல் திரும்பவும் கைப்பற்றியது. அதன்பின் 2005-ம் ஆண்டுவரை தொடர்ச்சியாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் காஸா பகுதியை வைத்திருந்து, அங்கு 21 யூதக் குடியிருப்புகளை அமைத்தது. காஸாவை விட்டு வெளியேறும் பாலஸ்தீனர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவித்தது. ஆனால், தங்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், யூதக் குடியிருப்புகளை அகற்றக் கோரியும் காஸா மக்கள் போராடினர். பல நேரங்களில் அது வன்முறைப் போராட்டமாக மாறியது.


கடந்த 93-ம் ஆண்டு ஆஸ்லோ ஒப்பந்தப்படி, பாலஸ்தீன சுயாட்சி அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அதன்பின் மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகள் பாலஸ்தீன சுயாட்சி பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, அந்தப் பகுதிகளை நிர்வாகம் செய்யும் அதிகாரம் பாலஸ்தீன அரசிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், ராணுவம், வான் கட்டுப்பாடு, நீர்நிலைகள் பராமரிப்பு உள்ளிட்ட பெரும்பாலான அதிகாரங்கள் இஸ்ரேல் வசமே இருந்தன. ஒரு பக்கம் பாலஸ்தீன அரசு நிர்வாகம் செய்தாலும், காஸா மற்றும் மேற்குக்கரையை இஸ்ரேல் ராணுவம் கடுமையாக அடிக்கடி தாக்கி வந்தது. அங்கு வசிக்கும் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
நன்றி
Publisher: www.vikatan.com