நடிகர் விஜய் நடிப்பில் நாளை வெளியாகவிருக்கும் `லியோ’ படம், `இசை வெளியீட்டு விழா ரத்து தொடங்கி அதிகாலை சிறப்புகாட்சிகளுக்கு அனுமதி மறுப்பு’ வரை தொடக்கம் முதல் திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய நாள் வரை தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு `தி.மு.க-வின் அரசியல் அழுத்தம்தான் காரணம், உதயநிதி ஸ்டாலின் உரிமையாளராக இருந்த ரெட் ஜெயன்ட் தயாரிப்பு நிறுவனத்துக்கு திரைப்பட விநியோக உரிமை கொடுக்காததுதான் காரணம்’ என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டிவருகின்றன.

`லியோ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 30-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட இருந்தது. பின்னர், பின்னர் பாதுகாப்பு காரணங்களால் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது படத் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ். அப்போதே இதற்கு `முழுக்க அரசியல் அழுத்தமே காரணம்’ என சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர். அதைத்தொடர்ந்து லியோ படத்தில் பணியாற்றிய நடனக் கலைஞர்களுக்குப் பேசிய சம்பளம் வழங்கவில்லை என சர்ச்சை எழுந்தது. பின்னர் அது பொய்யான தகவல் என சொல்லப்பட்டது. தொடர்ந்து, லியோ படத்தின் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் சென்றும் 7 மணி சிறப்புக் காட்சிக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. காலை 9 மணி முதல் இரவு 1:30 வரை மட்டுமே 5 காட்சிகள் திரையிடப்பட வேண்டும் என உத்தரவிட்டது. தொடர்ந்து லியோ படம் வெளியாவதற்குள் பல்வேறு முட்டுக்கட்டைகள் முளைத்தன.
இந்த முட்டுக்கட்டைகளுக்கெல்லாம் பின்னணியில் தி.மு.க குடும்பம்தான் இருக்கிறது என எதிர்க்கட்சிகளும், விஜய் ரசிகளும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தி.மு.க ஆட்சியில் ஒட்டுமொத்த சினிமா துறையும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சாதகமான தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே சிறப்புக் காட்சிக்கு அனுமதி தரப்படுகிறது. பிறருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது!” என குற்றம்சாட்டினார்.

அதேபோல அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆட்சியில் திரைத்துறையைச் சுதந்திரமாகச் செயல்படவிட்டோம். அன்றைக்கு விஜய் படத்தை ரிலீஸ் செய்யவிட்டோம். ஆனால், இன்றைக்குத் திரைப்படங்கள் ரெட் ஜெயன்ட்டுக்குக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கவில்லையென்றால், பிரச்னைகள், தொல்லைகள் வரும். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 10 ஆண்டுகளில் 20, 30 படங்களைத்தான் வெளியிட்டனர். ஆனால், இந்த இரண்டு ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை ரெட் ஜெயன்ட் வெளியிட்டது. அவர்கள் கேட்கிற அடிமாட்டு விலைக்குப் படங்களைக் கொடுத்தால்தான் எல்லாவிதமான அனுமதியும் கிடைக்கும். திரைப்படக் கலைஞர்களை தி.மு.க., முழுமையாக அச்சுறுத்திவைத்திருக்கிறது!” என்று பேசினார்.

தொடர்ந்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, “நடிகர் விஜய்யைப் பார்த்து தி.மு.க பயப்படுகிறது. அரசு நடிகர்களிடையே பாரபட்சம் பார்க்கக் கூடாது. அ.தி.மு.க ஆட்சி காலத்தில் பாரபட்சம் இல்லை. 2006 முதல் 2011வரை ஒரு குடும்பத்தில் கட்டுப்பாட்டில் இருந்தது. தி.மு.க ஆட்சி காலத்தில் திரைத்துறை முடங்கி போய் இருந்தது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகுதான் வெளிப்படையான நிர்வாகத்தினால் திரைத்துறை நல்ல முன்னேற்றத்தை பெற்றது. சிறப்பு காட்சி வழங்கிய பின்னர் குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது முறை கிடையாது. தற்போது திரைத்துறை முடங்கி உள்ளதாக அந்தத் துறையைச் சார்ந்தவர்கள் கூறுகின்றனர். தமிழ் சினிமாவில் 200 திரைப்படங்களை வெளியிட முடியாமல் முடங்கி உள்ளது.
இதற்கு காரணம் ரெட் ஜெயன்ட் மூவிஸின் ஆதிக்கம்தான். அதனுடைய உரிமையாளர் இன்று அமைச்சராக உள்ளார். நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடத்த பல்வேறு காரணங்களை கூறி அனுமதி தரவில்லை. ஆனால் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலர் படத்திற்கு அனுமதி கொடுத்தனர். பாரபட்சமாக பார்க்கப்படும் நிலை திரைத்துறைக்கு நல்லது கிடையாது. திரைத்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும்!” என்றார்.
இவர்கள் தவிர, லியோ படத்தின் அனைத்து தடங்கல்களுக்கும் தி.மு.கதான் காரணம் என தொடக்கம் முதலே கூறிவரும் நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ இதற்கு முன்பு வெளியான படங்களுக்கு எல்லாம் ஏன் இவ்வளவு நெருக்கடி கொடுக்கவில்லை? இதேபோல ஏன் `ஜெயிலர்’ படத்துக்கு செய்யவில்லை? அதே நேரு உள்விளையாட்டு அரங்கில்தான் அவர்களும் பாடலை வெளியிட்டார்கள். இதுவரை இல்லாத நெருக்கடியை லியோ படத்திற்கு ஏன் தர வேண்டும். விஜய் அரசியல் கட்சி தொடங்கப்போகிறார் என்பதால்தான் நெருக்கடி தருகிறார்கள். தேவை இல்லாமல் அவரை சொறிந்து விடுகிறார்கள். இதுவே ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஒரு படம் தயாரித்தால் இப்படி தீர்ப்பு வருமா? இந்த படத்தை ரெட் ஜெயின்ட் நிறுவனத்திற்கு கொடுக்கவில்லை என்றே அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார்கள்!” எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதனிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, லியோ விவகாரம் தொடர்பாக பேசுகையில், “திரைப்படங்களுக்கு ஒரு நாளைக்கு சிறப்புக் காட்சி உட்பட ஐந்து காட்சிகள். அதற்குத் தமிழக அரசு எந்தவிதமான தடையும் விதிக்கவில்லை. 4 மணிக்கு சிறப்புக்காட்சியைக் கேட்டார்கள். ஆனால், `காலை 9 மணி முதல் இரவு 1:30 மணி வரை திரையிட்டுக்கொள்ளலாம்’ என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. `4 மணிக்கு திரையிடட்டும்’ என்று நீதிமன்றம் கூறினால், அவர்கள் திரையிடட்டும்.
என்றைக்கும் திரையுலகத்தோடு எந்தவித விரோதத்தையும் சம்பாதித்துக்கொள்ள முதல்வர் விரும்ப மாட்டார். அ.தி.மு.க அன்று என்ன பாடுபடுத்தியது என்று நன்றாகவே தெரியும். கடம்பூர் ராஜூவைப் பொறுத்தவரைக்கும் போகிற போக்கில் எதையாவது பேசிவிட்டுச் செல்வார். திரைத்துறையை முடக்க இந்த அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை” என்று கூறினார்.
Thalabathy @actorvijay Anna’s #Leo @Dir_Lokesh excellent filmmaking , @anirudhofficial music , @anbariv master @7screenstudio #LCU ! All the best team !
— Udhay (@Udhaystalin) October 17, 2023
இந்த நிலையில், லியோ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ட்வீட் செய்திருக்கும் உதயநிதி ஸ்டாலின், “தளபதி விஜய் அண்ணாவின் லியோ , இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறந்த படத்தொகுப்பு, அனிருத் இசை வேற லெவல், அன்பறிவ் மாஸ்டர், 7ஸ்கிரீன்ஸ்டுடியோ #LCU ! ஆல் தி பெஸ்ட் டீம்!” என வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com