வெளிநாட்டில் இருந்து 62.61 லட்சம் அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலமாக கடந்த 1995-96 காலகட்டத்தில் பெற்றதாகவும், பின்னர் அந்த தொகையை இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாகவும், அமமுக பொதுச் செயலாளரான முன்னாள் எம்.பி டிடிவி.தினகரன் மீது அமலாக்கத்துறையினர், அன்னியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் எனும் ஃபெரா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த 1998-ம் ஆண்டு டிடிவி தினகரனுக்கு 31 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணையம்,` 31 கோடி ரூபாய் அபராதத்தை, 28 கோடி ரூபாயாக குறைத்து’ உத்தரவிட்டது.


இந்த அபராதத்தை செலுத்தாததால் டிடிவி தினகரனுக்கு எதிராக அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீசை எதிர்த்து தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தினகரனை அவமானப்படுத்தும் நோக்கிலேயே நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறி, அதனை ரத்து செய்து கடந்த 2003-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் 2005-ல் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கலைமதி அமர்வில் ஆகஸ்ட் 21-ல் விசாரணைக்கு வந்தது.
நன்றி
Publisher: www.vikatan.com