வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தோற்கடிப்பது என்ற ஒற்றை குறிக்கோளுடன் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளுக்குள் தேர்தல் நெருங்க நெருங்க பிணக்கு தலைதூக்கிவருகிறது.

‘இந்தியா’ கூட்டணி உருவாகக் காரணமானவர்களில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி குறிப்பிடத்தக்கவர். ஆளுநர் மூலமாகவும், அமலாக்கத்துறை மூலமாக மம்தா பானர்ஜி அரசுக்கும், திரிணாமுல் காங்கிரஸுக்கும் மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து குடைச்சல் கொடுத்துவருகிறது. மேலும், மேற்கு வங்கத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக பா.ஜ.க வளர்ந்திருக்கிறது. இந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக மத்தியில் பா.ஜ.க ஆட்சியமைத்தால், பெரும் பிரச்னைகளைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற அச்சம் அவருக்கு இருக்கிறது.
இதைப் போன்ற பல எதிர்க்கட்சிகளின் ஒருமித்த சிந்தனை காரணமாகவே ‘இந்தியா’ கூட்டணி உருவானது. இந்தக் கூட்டணியின் முதல் கூட்டம் நடைபெற்றது பீகார் தலைநகர் பாட்னாவில்தான். பாட்னாவில் முதல் கூட்டத்தை நடத்துவது என்ற முடிவை எடுத்தவர்கள் மம்தா பானர்ஜியும், பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமாரும்தான்.

ஆனால், இன்றைக்கு நிலைமை தலைகீழாக இருக்கிறது. ‘மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வை திரிணாமுல் காங்கிரஸ்தான் தோற்கடிக்கும். எனவே, காங்கிரஸுடன் நாங்கள் கூட்டணி வைக்கப்போவதில்லை. தனித்தே போட்டியிடப்போகிறோம்’ என்று தடாலடியாக அறிவித்துவிட்டார் மம்தா பானர்ஜி. நிதிஷ் குமாரைப் பொருத்தளவில், அவர் அணி மாற வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரபரக்க தொடங்கியுள்ளது.
‘இந்தியா’ கூட்டணியில் தமக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற வருத்ததில் நிதிஷ் குமார் இருப்பதாக கடந்த சில மாதங்கள் செய்திகள் வந்துகொண்டிருந்தன. இந்த நிலையில், மீண்டும் அவர் பா.ஜ.க கூட்டணிக்கே செல்லப்போகிறார் என்ற செய்திகள் வேறு தற்போது வந்துகொண்டிருக்கின்றன. அது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இது குறித்து அவர் விளக்கம் தந்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும்.

‘இந்தியா’ கூட்டணியில் இன்னொரு முக்கிய கட்சியான ஆம் ஆத்மியும் காங்கிரஸுடன் சுமூகமான உறவில் இல்லை. காங்கிரஸுடன் கூட்டணி சேர ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி, பஞ்சாப் தலைமைகள் ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தன. தற்போது, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்துவரும் நிலையில், அங்கிருக்கும் 13 மக்களவைத் தொகுதிகளிலும் நாங்கள்தான் போட்டியிடுவோம் என்று முதல்வர் பகவந்த் மான் கூறியிருக்கிறார்.
‘இந்தியா’ கூட்டணிக்குள் நடக்கும் இந்த சடுகுடு விளையாட்டால், பா.ஜ.க-வுக்குத்தான் கொண்டாட்டம். ‘இந்தியா’ கூட்டணியின் முதல் மூன்று கூட்டங்கள் நடந்தபோது, பா.ஜ.க-வுக்கும் பிரதமர் மோடிக்கும் ஏற்பட்டிருந்த பதற்றமும் அச்சமும் இப்போது இல்லை. காரணம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் பா.ஜ.க பெற்ற வெற்றி. அத்துடன், ‘இந்தியா’ கூட்டணிக்குள் தற்போது எழுந்திருக்கும் தொகுதிப்பங்கீடு தொடர்பான கருத்து வேறுபாடுகள், பா.ஜ.க-வுக்கு கூடுதல் தைரியத்தைக் கொடுத்திருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, ‘தேசிய அளவில் கூட்டணி. ஆனால், மாநிலத்தில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு செய்துகொள்ள மாட்டோம். நாங்கள் மட்டும் தனியாகப் போட்டியிடுவோம் என்பது என்ன மாதிரியான அணுகுமுறை. இதனால், யாருக்கு லாபம்? பா.ஜ.க-வுக்குத்தானே லாபம்?’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
‘மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி செய்த அதே தவறை மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸும் பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும் இப்போது செய்கின்றன’ என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.
‘காங்கிரஸ் கட்சியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை’ என்று கூறும் மம்தா பானர்ஜி, ‘மேற்கு வங்கத்தில் நாங்கள் தனித்துப்போட்டியிடுவோம் என்பதை தொடர்ந்து சொல்லிவருகிறேன். காங்கிரஸிடம் பல திட்டங்களை முன்வைத்தேன். ஆனால், அவற்றை அவர்கள் நிராகரித்துவிட்டார்கள்’ என்கிறார்.

மம்தா பானர்ஜிக்கும் ராகுல் காந்திக்கும் அரசியல் ரீதியாக சமூகமான உறவு இருக்கலாம். ஆனால், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்துவருகிறார்கள். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆதிர் ரஞ்சன் சௌத்ரிக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்துவருகிறது.
இந்த நிலையில், தொகுதிப்பங்கீடு எப்படி சுமூகமாக நடைபெறும்? மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என்று மம்தா பானர்ஜி அறிவித்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். பஞ்சாப்பிலும் இதுதான் நிலைமை. அங்கிருக்கும் ஆம் ஆத்மி அரசை காங்கிரஸ் நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்துவருகிறார்கள்.
இதற்கிடையில், ‘மேற்கு வங்கத்தில் காங்கிரஸும் திரிணாமுல் காங்கிரஸும் கூட்டணி அமைத்துத்தான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம்’ என்று கூறியிருக்கிறார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்.
இறுதியில் எது தான் நடக்கும்… இத்தனை முரண்களை கடந்து இந்த கூட்டணி ஏற்பட்டாலும் தொண்டர்கள், நிர்வாகிகளால் இணைந்து பணியாற்ற முடியுமா எனும் கேள்விகள் வரிசை கட்டுகின்றன..!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com