சென்னை, தேனாம்பேட்டையில் இருக்கும் காமராஜர் அரங்கில் `சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும்-முக்கியத்துவமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸின் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். தி.க.தலைவர் கி.வீரமணி, தி.மு.க தலைமை செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, கோவா மாநில பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர், சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், வி.சி.க தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொஹிதீன், ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா, த.வா.க தலைவர் வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதலில் பேசிய பீட்டர் அல்போன்ஸ், “ஒரு மனிதனின் அதிகாரப்படுத்துதல் என்பது அவனுடைய பிறப்புதான் என்ற கட்டமைப்பை எதிர்த்து, யார் அதிகாரத்தில் இருக்க வேண்டும்… யார் கையில் ஆட்சி இருக்க வேண்டும் என்ற முடிவை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்திருக்கிறது. ராகுல் காந்தியின் குரலால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்பது வலுத்துள்ளது. பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.பி, பகுஜன் சமாஜ் கட்சியின் இஸ்லாமிய உறுப்பினரைப் பார்த்து அருவருக்கத்தக்க வார்த்தைகளில் பேசியிருக்கிறார்.
இது நாட்டின் ஜனநாயகம் எங்கே செல்கின்றது என்ற கேள்வியை எழுப்புகிறது. நாட்டின் உள்துறை அமைச்சகத்தில் இருக்கும் 90 செயலாளர்களில் 83 பேர் குறிப்பிட்ட வகுப்பினர். இதர வகுப்பைச் சார்ந்தவர்கள் 7 பேர்தான். ராகுல் காந்தியின் இந்தக் கருத்து இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. இந்தியா கூட்டணிக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதற்காகத்தான் சிறுபான்மை மக்கள் தாக்கப்படுகிறார்கள், கொச்சைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கான பாதுகாப்பை இந்தியா கூட்டணியும், தமிழக அரசும் வழங்க வேண்டும், நாற்பதும் நமது மட்டுமல்ல… நாளையில் டெல்லியில் ஆட்சியும் நமதுதான்” என்றார்.

காங்கிரஸ் கருத்தரங்கத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என ராகுல் காந்தி குரல் கொடுத்து வருகிறார். இட ஒதுக்கீடு என்பது மிகவும் முக்கியம், அதற்கு கணக்கெடுப்பு அவசியம். இன்றைய இட ஒதுக்கீடுக்கு காரணமாக இருந்தவர் ஜவஹர்லால் நேரு. அதற்கு அச்சாணியாக, காமராஜரும், தந்தை பெரியாரும் இருந்தார்கள். காங்கிரஸ் கட்சிக்கு மத நம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும் உண்டு. ஆனால் மற்றவர்களை மத அடிப்படையில் புண்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி கொள்கைக்காக பிரியவில்லை. தனிமனித விரோதங்களுக்காக பிரிந்திருக்கின்றன” என வெடித்தார்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், “நாடாளுமன்றத் தொகுதியை மறுவரையரை செய்தால் சோவியத் யூனியனைப்போல இந்தியா துண்டு, துண்டாகப் போய்விடும். அண்ணா விரும்பிய திராவிட நாடு உருவாகிவிடும். அதிபர் நாடாக மாற்ற பிரதமர் முயல்கின்றார், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கொண்டுவர நினைக்கின்றார். அப்படி செய்தால் ஒரு சிறு பகுதிக்கு மட்டும்தான் அவர் அதிபராக இருப்பார்” என கடுகடுத்தார்.

கருத்தரங்கில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், “இந்தியா முழுவதும் 70 சதவிகிதத்துக்கும் அதிகமாக ஓ.பி.சி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டு ராகுல் காந்தி குரல் கொடுத்திருக்கிறார். 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தூதராக இருப்பவர்களில், மூன்று நபர்கள்கூட ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்தவர்கள் இல்லை. சனாதனத்தின் குறிக்கோள், நாம் படிக்கக் கூடாது, பெண்கள் மார்பு சீலை போடக் கூடாது என்பதுதான். மதத்தின் வெறியைத் தூண்டி, மக்களைக் கொலைசெய்து, மத வெறுப்பை செய்கின்ற கூட்டம்தான் சனாதன கூட்டம்” என்றார் காட்டமாக.
தொடர்ந்து பேசிய மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, “பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா தாக்கலின்போது ராகுல் காந்தி ஆற்றிய உரை வரலாற்று சிறப்புமிக்கது. அதில் ஓ.பி.சி பெண்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர் என்ற உண்மையைச் சொன்னது நாட்டையே உலுக்கியிருக்கிறது. மேலும் அவர், ‘பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். அவர்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிய, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என தெரிவித்திருக்கிறார். கர்நாடகாவில் ராகுல் காந்தியின் குரல் பா.ஜ.க-வை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. தற்போது தேசிய அளவில் பா.ஜ.க-வை வீட்டுக்கு அனுப்ப குரல் கொடுத்து வருகின்றார். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஜனநாயகத்தையும், மக்களாட்சித் தத்துவத்தையும் குழி தோண்டி புதைக்கும் செயல். இது ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் செயல். இது பா.ஜ.க-வின் கண்கட்டி வித்தை” என்றார் சூடாக.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், “அ.தி.மு.க கூட்டணி முறியவில்லை, வளைந்திருக்கிறது. இதை நம்பினால் மிகப்பெரிய சதித்திட்டத்திற்கு ஆளாகிவிடுவோம். இது ஒரு நாடகம். நீங்கள் முறிந்தாலும் சரி… உடைந்தாலும் சரி… எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி… இந்தியா கூட்டணி வெற்றிக்கூட்டணி. இதைப் பிரிக்க முடியாது. ஒரே மதம், ஒரே சாதி என்பதை பிரதமர் ஏற்பாரா, அவர் ஏற்க மாட்டார்! மதங்கள் இல்லையென்றால் அவரால் அரசியல் செய்ய முடியாது. சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என ராகுல் காந்தி குரல் கொடுத்துள்ளதால், அதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. ஒன்பது ஆண்டுக்கால ஆட்சி முடியும் வேளையில், மகளிர் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டிருக்கிறது. இது ஒரு தேர்தல் நாடகம். மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “2011-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினர். ஆனால் அதனை வெளியிட பா.ஜ.க அரசு மறுத்துவிட்டது. எனவே கணக்கெடுப்பு நடத்தி பிற்படுத்தப்பட்ட மக்கள் 70 சதவிகிதத்தினர் இருக்கின்றார்கள் என்றால், அவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அப்படி செய்தால், சாதாரண மக்கள்கூட அனைத்து துறைகளிலும் முன்னேறிவிடுவார்கள். எனவேதான், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை” என்று கொதித்தார்.

தொடர்ந்து பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், “ஓ.பி.சி சமுகத்தினர் எவ்வளவு வஞ்சிக்கப்படுகின்றனர் என ராகுல் காந்தி பேசியது ஒட்டுமொத்த நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பா.ஜ.க இப்போது முட்டுச்சந்தில் நிற்கின்றது. ராகுல் காந்தியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அமித் ஷா திணறிப்போனார். மத அடிப்படையில்தான் மக்கள் கணக்கெடுப்பு நடந்துள்ளது. பா.ஜ.க இட ஒதுக்கீடு ஓ.பி.சி மக்களுக்கு வழங்கக் கூடாது என்பதற்காக ரதயாத்திரை நடத்தியது. அவர்கள் ஓ.பி.சி இந்துக்களுக்கு எதிரானவர்கள். இதேபோல் கிறிஸ்துவ, முஸ்லிம் மக்களின் இட ஒதுக்கீட்டுக்கும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவோம் என்று சொல்லி யாத்திரை நடத்தாமல், இந்திய மக்கள் ஒன்றுபட வேண்டும் என்பதற்காக இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் காந்தி நடத்தியுள்ளார். ஓ.பி.சி, எம்.பி.சி, எஸ்.சி, எஸ்.டி ஒன்றிணைந்தால், நாம்தான் பெரும்பான்மை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிய வேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கம். மதச்சார்பின்மையை சீர்குலைப்பதுதான் அமித் ஷா, மோடியின் வேலை. அவர்கள் எதிர்பார்க்க முடியாத ஒன்று நடந்திருக்கிறது.

ராகுல் காந்தியின் சிந்தனைக்கு வலுசேர்க்கும் விதத்தில் 27 கட்சிகள் ஒன்றிணைந்திருக்கின்றன. ஒன்று சேருவோம், வீழ்த்தி காட்டுவோம் என்பதுதான் இந்தியா கூட்டணியின் நோக்கம். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த உடன் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதற்கு ராகுல் காந்தி துணை நிற்ப்பார்” என வெடித்தார்.
தொடர்ந்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், “சாதி பெயரை தன் பெயரோடு சேர்க்காமல் இருப்பவர்கள் தமிழக மக்கள். இன்றும் வடமாநிலத்தவர்கள் தங்கள் பெயரோடு சாதி பெயரை சேர்த்து வருகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு முயற்சி இந்தியா முழுவதும் தொடரவேண்டும்” என்றார்.
இறுதியாகப் பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, “ஒட்டுமொத்த இந்தியாவும் ராகுல் காந்தியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சமுகநீதி. சாதியை ஒழிக்க வேண்டும் என்பதுதான் நமது கொள்கை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் தேவை. ஆகையால் இட ஒதுக்கீட்டுக்காக, மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. தமிழகத்தில் முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு கொண்டுவர முடியவில்லை.

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைமுறை இன்றைக்கு சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுத்துள்ளது. இதை வடமாநிலங்களில் கொண்டு சேர்க்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமைகளை மீட்டுத்தர வேண்டும். தென்னகத்திலிருந்து பா.ஜ.க-வை அனுப்பிவிட்டோம். அதேபோல் வட மாநிலங்களிலிருந்தும் அனுப்ப வேண்டும். இன்னும் ஆறு மாத காலத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமையும்” எனக் கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com