
பட மூலாதாரம், Getty Images
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது பாஜக அரசு. இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த, முஸ்லிம் அல்லாத மதப்பிரிவினர் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள்; மேலும் இந்திய குடியுரிமை பெறவும் வழிவகை செய்கிறது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா என்றால் என்ன?
பொதுவாக வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியக் குடிமகனாக முடியாது.
அவர்கள் பொதுவாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள்.
ஆனால், இந்த சட்டத் திருத்தம் இதில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அவர்களை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க வழிவகை செய்யப்படுகிறது.
கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே அந்த திருத்தம்.
மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
இதனை எதிர்ப்பவர்கள் கூறுவது என்ன?
மதச்சார்பின்மை எனும் இந்தியாவின் அடித்தளத்தையே இது சிதைத்துவிடும் என்கிறார்கள் இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள்.

பட மூலாதாரம், Getty Images
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கும் மாணவிகள்
மதத்தை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமை வழங்கப்படுவதை எதிர்க்கட்சிகள் எதிர்கின்றன.
இந்திய அரசமைப்பு மதத்தைப் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்கிறது.
அதுமட்டுமல்லாமல் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. ஆனால், இது மதபாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் தருகிறது இந்த சட்டம் திருத்தம் என்கிறார்கள் இதனை எதிர்ப்பவர்கள்.
சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகத்தான் இந்த சட்டம் என்றால் இதில் இஸ்லாமியர்களையும் சேர்த்து இருக்க வேண்டும். ஏன் பாகிஸ்தான் அகமதியாக்களையும், மியான்மர் ரோஹிஞ்சாகளையும் விட்டுவிட்டார்கள் என கேள்வி எழுப்புகிறார்கள் அவர்கள்.
டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் கெளதம் பாட்டியா, வெளிப்படையாகவும் அப்பட்டமாகவும், மத பாகுபாட்டிற்குச் சட்ட அங்கீகாரம் தருகிறது இந்த சட்டத் திருத்தம் என்கிறார்.
இலங்கையில் இன்னல்களை சந்தித்த இலங்கை தமிழர்களை ஏன் இந்த பட்டியலில் சேர்க்கவில்லை என்ற கேள்வியையும் முன் வைக்கிறார்கள்.
எந்தெந்த கட்சிகள் எதிர்கின்றன?

காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி, சிபிஎம், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இதனை எதிர்கின்றன.
கண்களுக்குப் புலப்படாத வகையில் இந்து-முஸ்லிம் பிரிவினைவாதத்தை முன்னெடுக்கிறது இந்த சட்டதிருத்தம் என சிவசேனை சாம்னாவில் தலையெங்கம் எழுதியது.
ஆனால், நாடாளுமன்றத்தில் இதனை ஆதரித்து இருக்கிறது சிவசேனை.
நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இதனைக் கடுமையாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து இருக்கிறார்கள்.
அதிமுக இந்த சட்டமசோதாவை ஆதரித்துள்ளது.
தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
இரண்டுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறியும் நோக்கில், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) நடவடிக்கை அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.
அதற்கான நிர்ணயிக்கப்பட்ட தேதி, 1971-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆக இருந்தது. என்ஆா்சி நடவடிக்கையின்படி, அஸ்ஸாம் மக்கள் மேற்குறிப்பிட்ட காலகட்டத்துக்கு முன்னதாக இந்தியாவில் வசித்து வந்தவா்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
இந்த நடவடிக்கை மதத்தை அடிப்படையாகக் கொண்டது அன்று. அதே வேளையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மதத்தை அடிப்படையாகக் கொண்டது.
அதேநேரம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விலக்கப்பட்ட வங்கதேச இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்க இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வழிவகை செய்கிறது.
அப்படியானால், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விலக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடியேறிகள் இந்த குடியுரிமை பெற்று அஸ்ஸாம் மாநிலத்திலேயே தங்க முடியும்.
இதன் காரணமாக வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பல அமைப்புகள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்கின்றன.
விலக்கப்பட்ட பகுதிகள் என ஏதேனும் இருக்கிறதா?
நுழைவு அனுமதிப் படிவம் (இன்னா்-லைன் பொ்மிட்) மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய பகுதிகளுக்கும் சட்டத் திருத்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளும் இஸ்லாமியப் பெரும்பான்மை நாடுகள். ஒன்று அரசே இஸ்லாமிய அரசாக இருக்கிறது, அல்லது அங்கு இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவர்கள் அங்குள்ள சிறுபான்மை மக்களைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு தேவை என சிவராஜ் இதழின் ஆசிரியர் ஆர் ஜெகநாதன் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து இருந்தார்.
அரசு என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images
குடியுரிமை பெறக் குறிப்பிட்ட பிரிவினா் அனுபவிக்கும் துயரங்களைப் போக்குவதற்கு இந்த மசோதா வழிவகுக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தி பேசிய அமித்ஷா, “காங்கிரஸ்தான் மதத்தின் பெயரால் நாட்டை பிரித்தது. அதனை சரி செய்யவே இந்த சட்டமசோதா” என்றார்.
“ஏற்கெனவே வங்கதேச பிரிவினையின் போதும், உகாண்டாவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வர்கள் தாக்கப்பட்ட போதும் சில சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி அங்கிருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு இருக்கிறது,” என்று தெரிவித்தார் அமித்ஷா.
“இது .001 சதவீதம் கூட சிறுபான்மை மக்களுக்கு எதிரானது இல்லை. இது ஊடுருவல்காரர்களுக்கு எதிரானது,” என்றார்.
இந்த சட்டதிருத்த மசோதாவை ஆதரித்து 293 நாடாளுமன்ற உறுப்பினர்களும் , எதிர்த்து 82 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்