அனல் பறக்கும் ராஜஸ்தான் தேர்தல் களம்… ஸ்கோர் செய்வது

சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 25-ம் தேதியன்று நடைபெறவிருக்கும் ராஜஸ்தானில், காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளின் தேர்தல் பரப்புரை உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. 200 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில், அதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸுக்கும், மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

அசோக் கெலாட், ராகுல் காந்தி பிரசாரம்

மத்திய அரசின் திட்டங்களை முன்வைத்து பா.ஜ.க-வும், தனது ஏழு முக்கிய வாக்குறுதிகளை முன்வைத்து காங்கிரஸும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. முதல்வர் அசோக் கெலாட்டை முன்னிறுத்தி காங்கிரஸ் பிரசாரம் செய்துவரும் நிலையில், முதல்வர் வேட்பாளர் இல்லாமலேயே பா.ஜ.க களத்தில் நிற்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது, ‘எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிரதமர் வேட்பாளரே இல்லை’ என்று, அதை ஒரு பலவீனமாக சுட்டிக்காட்டும் பா.ஜ.க., ராஜஸ்தானில் முதல்வர் வேட்பாளரை நிறுத்தாதது விநோதமாக இருக்கிறது.

ராஜஸ்தானில் தன்னை முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க முன்னிறுத்தும் என்று முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே பெரும் நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், அது நடக்கவில்லை. ஆனாலும், தன் ஆதரவாளர்களுடன் அவர் தேர்தல் களத்தில் வலம்வந்துகொண்டிருக்கிறார். தங்கள் தொகுதிக்கு வந்து பிரசாரம் செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கும் வேட்பாளர்களின் தொகுதிகளில் மட்டும் அவர் பிரசாரம் செய்கிறார்.

வசுந்தரராஜே சிந்தியா

முதல்வர் வேட்பாளர் இல்லையென்பதால், பிரதமர் மோடியின் முகத்தையே எல்லா இடங்களிலும் பா.ஜ.க முன்னிறுத்திவருகிறது. பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் மோடி பிரசாரம் செய்துவருகிறார். ஜெய்பூரிலும், ஜோத்பூரிலும் ‘ரோடு ஷோ’க்களில் அவர் பங்கேற்கவிருக்கிறார்.

ஜெய்பூரில் நவம்பர் 22-ம் தேதி பிரமாண்டமான ‘ரோடு ஷோ’வுக்கு பா.ஜ.க-வினர் ஏற்பாடு செய்துவருகிறார்கள். நவம்பர் 23-ம் தேதிதான் பிரசாரம் நிறைவடைகிறது. அன்றைக்கு, முதல்வர் அசோக் கெலாட்டின் சொந்த ஊர் அமைந்திருக்கும் ஜோத்பூரில் நடைபெறவிருக்கும் ‘ரோடு ஷோ’-வில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவிருக்கிறார். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நடைபெறுவது வழக்கமாக இருந்துவருதால், இந்த முறை தங்களுடைய ஆட்சிதான் என்ற நம்பிக்கையுடன் பா.ஜ.க-வினர் வேலை செய்துவருகிறார்கள்.

மோடி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களும் ராஜஸ்தானில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டுவருகிறார்கள். பிரசாரப் பொதுக்கூட்டம் ஒன்றில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய மோடி, ‘21-ம் நூற்றாண்டில் இந்தியாவை முன்னெடுத்துச் செல்வதில் ராஜஸ்தான் முக்கியப் பங்கு வகிக்கும். அதனால்தான், வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லக்கூடிய அரசு ராஜஸ்தானில் தேவைப்படுகிறது’ என்றார்.

மீண்டும் வெற்றிபெற வேண்டும், காங்கிரஸ் ஆட்சியே தொடர வேண்டும் என்று முதல்வர் அசோக் கெலாட் மெனக்கெடுகிறார். இன்னொருபுறம், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி உறுதியாக வெல்லும் என்று அங்கு பிரசாரம் செய்த ராகுல் காந்தி உறுதியாகக் கூறினார். அதேபோல, மத்தியப்பிரதேசத்திலும் கண்டிப்பாக காங்கிரஸ் ஜெயிக்கும் என்றும் ராகுல் காந்தி கூறிவருகிறார். ஆனால், ‘ராஜஸ்தானில் காங்கிரஸ் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது’ என்று பட்டும் படாமலும் கூறினார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி பிரசாரம்

அதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் முதல்வர் ஆவதற்கு அசோக் கெலாட் முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்ற பிரச்னை இருக்கிறது. அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக சச்சின் பைலட் வெளிப்படையாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். போராட்டத்திலும் ஈடுபட்டார். சச்சின் பைலட் முதல்வராவதற்கு வழிவிட அசோக் கெலாட் மறுக்கிறார் என்ற வருத்தம் ராகுல் காந்திக்கு இருப்பதாகவும், அதனால், ராஜஸ்தான் தேர்தலில் அவர் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்றும் சில ஊடகங்கள் கூறிவந்தன.

அதனால்தான், மத்தியப்பிரதேசத்திலும், சத்தீஸ்கரிலும், தெலங்கானாவிலும் தேர்தல் பிரசாரத்தில் ஆர்வம் காட்டிவிட்டு, கடைசிக்கட்ட பரப்புரையின்போதுதான் ராஜஸ்தானுக்கு வருகிறார் என்ற விமர்சனத்தையும் சில ஊடகங்கள் முன்வைத்தன.

சச்சின் பைலட், அசோக் கெலாட்

அத்தகைய விமர்சனங்களுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான கே.சி.வேணுகோபால், ‘சில பா.ஜ.க ஆதரவு ஊடகங்கள் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக அவதூறு பரப்புகின்றன’ என்று குற்றம்சாட்டினார். ஆளும் காங்கிரஸும், எதிர்க்கட்சியான பாஜகவும் களத்தில் கடுமையான போட்டியை முன்வைக்கிறார்கள். இதில் எந்த தரப்பு மக்களை கவர்ந்திருக்கிறார்கள் என்பது தேர்தல் முடிவுகளில் தெரிய வரும்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *