கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கிறது தோகைமலை ஊராட்சி ஒன்றியம். கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், இந்த ஒன்றியக் குழுவில் மொத்தமுள்ள 15 இடங்களில் அ.தி.மு.க 10 இடங்களிலும், தி.மு.க 4 இடங்களிலும், பா.ஜ.க ஓர் இடத்தையும் கைப்பற்றினர். தோகைமலை ஒன்றியக் குழுத் தலைவராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த லதா ரெங்கசாமி தேர்வுசெய்யப்பட்டார். அதோடு, துணைத்தலைவர் பதவியையும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த பாப்பாத்தி சின்னவழியான் கைப்பற்றினார்.
இந்த நிலையில், `தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு தி.மு.க-வினர் அதிகாரத் துஷ்பிரயோகம், மிரட்டல்கள், பொய்வழக்குகள் மூலம் தோகைமலை ஒன்றியத்தில் எட்டு அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்களை தி.மு.க பக்கம் இழுத்துவிட்டதாக’, அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடியாக குற்றம்சாட்டினார். இதற்கிடையில், தி.மு.க சார்பில் நின்று வெற்றிபெற்ற ஒன்றிய கவுன்சிலர் ஒருவரை, அ.தி.மு.க-வினர் தங்கள் கட்சிக்கு இழுத்தனர். இறுதியாக, தி.மு.க பலம் 11 ஆக உயர்ந்தது. மாறாக, அ.தி.மு.க பலம் மூன்றாகக் குறைந்தது.

இந்த நிலையில், தோகைமலை ஒன்றியக் குழுத் தலைவர் லதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த 11 தி.மு.க ஆதரவு கவுன்சிலர்களும், அவர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு குளித்தலை ஆர்.டி.ஓ புஷ்பாதேவியிடம் மனு அளித்தனர். 15 கவுன்சிலர்கள் உள்ளடக்கிய தோகைமலை ஒன்றியத்தில், 80 சதவிகிதம் கவுன்சிலர்களின் ஆதரவு இருந்தால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரலாம் என்ற நிலை ஏற்பட்டது.
நன்றி
Publisher: www.vikatan.com
