கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த முதியவர் மணிவண்ணன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). பள்ளியில் படிக்கும் இவரின் பேத்தி கயல்விழி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), தீபாவளி அன்று தாத்தா மணிவண்ணன் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது மிகுந்த சோர்வுடனும், குழப்பத்துடனும் இருந்த கயல்விழியைப் பார்த்த மணிவண்ணன், என்ன நடந்தது என்று கேட்டிருக்கிறார். முதலில் தயங்கிய கயல்விழி, அதன் பிறகு ஆரூரைச் சேர்ந்த தன்னுடைய ஆண் நண்பர் அருண் பிரசாத்துடன் தனிமையில் இருந்துவிட்டு வருவதாகத் தெரிவித்திருக்கிறார். அத்துடன், தாங்கள் தனிமையில் இருந்ததை அருண் பிரசாத் வீடியோ எடுத்ததாகவும் கூறி அழுதிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மணிவண்ணன், தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு ஆரூரில் இருக்கும் அருண் பிரசாத் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.


அங்கிருந்த அருண் பிரசாத்திடம் `ஸ்கூல் போற புள்ளைய இப்படி செய்யலாமா?’ என்று கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதற்கு சரியாக பதிலளிக்காத அருண் பிரசாத் அங்கிருந்து தப்பியோட முயன்றிருக்கிறார். அப்போது மணிவண்ணனும், அவருடைய மகனும், அருண் பிரசாத்தின் செல்போனை பிடுங்கிக் கொண்டனர். அதன் பிறகு அந்த செல்போனைப் பார்த்த மணிவண்ணன், அதில் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்களும், பல பள்ளி மாணவிகளின் நிர்வாண போட்டோக்களும், வீடியோக்களும் இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்த அவர், நேற்று முன்தினம் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்ததுடன், அருண் பிரசாத்தின் செல்போனையும் ஒப்படைத்திருக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், அருண் பிரசாத்தின் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர்.
நன்றி
Publisher: www.vikatan.com