காவிரி நீரை பெற ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவை எதிர்நோக்கிக்கொண்டே இருக்கக்கூடாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநரை நேரில் சந்தித்து தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”காவிரி விவகாரம் மக்கள் பிரச்சனையாக உள்ளது. விவசாய பெருமக்களை பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் காவிரி நீருக்காக கர்நாடகாவை எதிர்நோக்கிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இதற்கு தேசிய நதிகள் இணைப்பு மட்டுமே தீர்வாக இருக்கும்.
கர்நாடகாவில் கூடுதல் நீர் இருந்த போதும், நமக்கு தண்ணீர் தர மறுக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் டெல்லி சென்று வந்த பிறகும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என்று சொல்வது தவறு. தமிழர்களை அடித்தால் நான் என்ன செய்வது என அமைச்சர் சொல்கிறார். ஒரு அமைச்சர் இப்படி பேசுவது சரியல்ல.
நமது உரிமைகளை விட்டுக்கொடுக்கக் கூடாது. தமிழ்நாட்டில் இருந்து கனிம வளங்கள் கொள்ளை போய்க்கொண்டே இருக்கிறது. இதனை தடுக்க வேண்டும். மாநில நலன்களை முன்வைத்து ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம்” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
நன்றி
Publisher: 1newsnation.com