சிறை என்றாலே சாப்பாடு மிகவும் மோசமாக இருக்கும் என்று ஒரு கருத்து உண்டு. ஆனால் இப்போது சிறையில் உணவோடு சேர்த்து அசைவ உணவுகளும் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இது தவிர சிறை கேன்டீனில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி பயன்படுத்திக்கொள்ள முடியும். தண்டனை பெற்ற கைதிகளுக்கு சிறையிலேயே வேலை வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். மகாராஷ்டிரா சிறைகளில் இருக்கும் கேன்டீன்களில் இது வரை சோப்பு, பிஸ்கெட் போன்ற சொற்ப பொருட்களே கிடைக்கும். அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறைத்துறை முடிவு செய்தது.

இதையடுத்து கைதிகளுக்கு என்ன பிடிக்கும் என்று அவர்களிடமே கேட்டு அந்த பொருட்களை கேன்டீனில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி கைதிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. கைதிகள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு பொருட்களின் பெயரை தெரிவித்தனர். சிறையில் பிறந்தநாள் கொண்டாட கேக் இல்லாமல் இருக்கிறது. எனவே கேண்டீனில் ஒரு கிலோ கேக் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சிலர் தெரிவித்தனர்.
ஆனால் சிறைக்குள் பிறந்த நாள் கொண்டாட அனுமதிக்க முடியாது என்று ஒரு கிலோ கேக் விற்பனை செய்ய முடியாது என்று கூறிவிட்டனர். ஆனால் சிறிய கேக் விற்பனை செய்யப்படும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சிறைத்துறை அதிகாரி அமிதாப் குப்தா கூறுகையில்,”கைதிகளின் கருத்து கேட்டு பாதுகாப்பு அம்சங்களை கவனத்தில் கொண்டு சிறை கேன்டீன்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 167 பொருட்களை சேர்க்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.
ஐஸ் கிரீம், பானிபூரி, சமோசா, கச்சோரி, கடலைமிட்டாய், பாப்கார்ன், சிறிய வகை கேக்கள், இளநீர், பேஸ்வாஷ் கிரீம்கள், மருதானி போன்ற ஏராளமான பொருட்கள் சிறை கேண்டீனில் விற்பனை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறையில் விசாரணை கைதிகளாக இருப்பவர்கள் தங்களது வீட்டில் இருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.3500 வாங்கி சிறையில் செலவு செய்து கொள்ள முடியும்.

தண்டனை பெற்ற கைதிகளுக்கு அவர்களின் திறமைக்கு தக்கபடி வேலை கொடுக்கப்படும். இதற்காக அவர்களுக்கு தினமும் 53 ரூபாயில் இருந்து 94 ரூபாய் வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இந்த பணத்தை சிறையில் செலவு செய்து கொள்ளலாம். அல்லது தங்களது உறவுகளுக்கு அனுப்பி வைக்கலாம். மகாராஷ்டிரா முழுவதும் 60 சிறைகள் இருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com