காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சாமஜ்வாடி, சிவசேனா (உத்தவ் தாக்கரே), சி.பி.எம்., ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகிய கட்சிகளின் எம்.பி-க்கள், தலைவர்கள் மற்றும் பிரபல ஊடகங்களின் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்படுவதாக வெளியான செய்திகள், இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

இது தொடர்பாக, மஹுவா மொய்த்ரா, பிரியங்கா சதுர்வேதி, பவன் கேரா ஆகியோர், தங்களின் ஐபோன்களை ஹேக் செய்யும் முயற்சிகள் நடைபெறுவதாக ஆப்பிள் நிறுவனம் தரப்பிலிருந்து வந்த அலர்ட் மெசேஜை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, பா.ஜ.க அரசையும் மோடியையும் சாடிவருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இந்த விவகாரத்தில், பின்னணியில் இருப்பது மத்திய அரசும், பிரதமர் மோடியின் ஆன்மாவான அதானியும்தான்” எனக் குற்றச்சாட்டும் வைத்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, மத்திய அரசு இது தொடர்பாக விசாரிக்க ஆணை பிறப்பித்தது. இந்த நிலையில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “எதிர்க்கட்சித் தலைவர்களை யாராவது கேலி செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர்கள் அதிகாரபூர்வமாகப் புகாரளிக்க வேண்டும், அதனடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமான கட்டத்தில் சென்று கொண்டிருப்பதாக நினைக்கிறேன். அதனால், அவர்கள் எல்லாவற்றிலும் சதி நடப்பதாகவே பார்க்கிறார்கள்.

உண்மை என்னவென்றால், இது ஒருவித செயலிழப்பு எச்சரிக்கை நடவடிக்கை என்று ஆப்பிள் நிறுவனமே தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்தச் செய்தி 150 நாடுகளிலுள்ள மக்களைச் சென்றடைந்திருக்கிறது. எனவே, இது ஆப்பிள் நிறுவனத்தின் முடிவிலிருந்து ஒரு பிழை எனத் தெரிகிறது, ஹேக்கர்களும் உலகம் முழுவதும் இருக்கின்றனர். இது குறித்து விசாரணை நடத்தப்படும்.
ஆப்பிள் நிறுவனமும் இந்த விசாரணைக் குழுவில் இணைய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சியினர் எதை வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், அவர்களின் நிலை நாட்டுக்குத் தெரியும். உட்கட்சிப்பூசல்களில் சிக்கித் தவிக்கிறார்கள். எங்களைப் பற்றி கருத்துச் சொல்லாமல், தங்கள் பலவீனங்களை அவர்கள் முதலில் பார்க்க வேண்டும். இந்தக் குற்றச்சாட்டில் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பது தெளிவாகிறது. ஓர் அரசுக்கு இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற அவசியம் இல்லை” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com