வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள அம்முண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு அரவையை, அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி ஆகிய இருவரும் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘‘50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சர்க்கரை ஆலையைக் கொண்டு வந்தேன். 50 ஆண்டுகள் கழித்தும், இதில் நடைபெறும் விழாவுக்கு வந்திருக்கிறேன். இதுவே பெரிய ஆச்சர்யம்தான். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஓட்டுப் போடுகிற வரைக்கும்தான் நீ அந்தக் கட்சி, நான் இந்தக் கட்சி என்பதெல்லாம்… ஓட்டுப்போட்ட பிறகு எல்லோருமே என் தொகுதி மக்கள்தான். வித்தியாசம் இருக்கக் கூடாது எனக் கருதுகிறேன்.


நானும், தலைவர் கலைஞரும் கோயம்புத்தூருக்கு ரயிலில் போய்க்கொண்டிருந்தோம். அப்போது, திருவண்ணாமலை, செய்யாறு போன்ற பகுதிகளெல்லாம் நம் மாவட்டத்துடன் இணைந்திருந்தது. கலைஞர் என்னிடம், ‘என்னய்யா உங்க ஊரில் பெரிய தகராறாக இருக்கிறது. ஒரேயொரு சர்க்கரை ஆலைதான் வந்திருக்கிறது. ஆளாளுக்கு, போளூர், செய்யாறு என்று அவரவர் ஊரில் சர்க்கரை ஆலையை அமைக்கச் சொல்கிறார்கள். என்ன செய்வது’ என்று கேட்டார். நான், ‘காட்பாடியில் கட்டிக்கொடுங்க’ என்றேன். இப்படித்தான் சர்க்கரை ஆலை காட்பாடிக்கு வந்தது.
நன்றி
Publisher: www.vikatan.com