இஸ்ரேலின் உளவு-பாதுகாப்பு கட்டமைப்பு:
உலகின் வல்லரசு நாடுகளே பொறாமைப்படும் அளவுக்கு சக்திவாய்ந்தது இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட். மத்திய கிழக்கு நாடுகளிலேயே உளவுத்துறைக்கென மிக அதிக அளவு நிதி ஒதுக்கக்கூடிய ஒரே நாடும் இஸ்ரேல்தான். தன் எல்லையைச் சுற்றியுள்ள லெபனான், சிரியா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் மட்டுமல்லாமல் தனது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அனைத்து தீவிரவாத குழுக்களுக்கு உள்ளேயும் தனது ரகசிய உளவாளியை ஒளித்து வைக்கும் அளவுக்கு மிகத் தந்திரமான நாடு இஸ்ரேல். இவ்வளவு ஏன்… தன்மீது தாக்குதல் தொடுத்த ஹமாஸ் அமைப்புக்குள்ளும் தனது உளவாளிகளை வைத்திருக்கிறது இஸ்ரேல். அவர்களில் உளவுத் தகவல் மற்றும் உதவிகள் மூலம் ஏராளமாக பாலஸ்தீன விடுதலைப் போராளிகளை, ஹமாஸ் தலைவர்களை கொன்றொழித்திருக்கிறது இஸ்ரேல் உளவுத்துறை. ஹமாஸ் அமைப்பினர் பயணிக்கும் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவிகளை ரகசியமாகப் பொருத்தி, அவர்களின் இருப்பிடத்தைத் துல்லியமாக அறிந்து, ட்ரோன் தாக்குதல்கள்மூலம் அவர்களின் கதையை கச்சிதமாக முடித்திருக்கிறது.


உளவு அமைப்பு ஒருபுறமிருக்க நாட்டின் எல்லைப் பாதுகாப்பைப் பொறுத்தவரையில், இஸ்ரேல்;-பாலஸ்தீன எல்லைகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள், தரை மோஷன் சென்சார்களையும் பொருத்தி கவனித்துக்கொண்டிருக்கிறது. தவிர, அனுதினமும் ராணுவ ரோந்துகளையும் மேற்கொண்டுவருகிறது. காஸா பகுதியிலிருந்து ஹமாஸ் அமைப்பு எப்போது வேண்டுமானாலும் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொள்ளும் என்பதை நன்கு தெரிந்த இஸ்ரேல், அயர்ன்-டிரோம் (Iron-Drome System) என்கிற பிரத்யேக தற்காப்பு தொழில்நுட்பத்தைக் கொண்டு தன்நாட்டைக் காத்துவருகிறது. அதாவது, எல்லையிலிருந்து எந்த ஏவுகணை இஸ்ரேல் வான்பரப்புக்குள் நுழைந்தாலும், அதை வழியிலேயே இடைமறித்து, தாக்கி அழிக்கும் அதிசிறந்த தொழில்நுட்பப் பாதுகாப்பு அமைப்பை இஸ்ரேல் கொண்டிருக்கிறது. இத்தகைய இஸ்ரேலின் அனைத்து தொழில்நுட்பத்தையும் தாண்டித்தான் ஹமாஸ் அமைப்பினர் நாட்டுக்குள் புகுந்திருக்கின்றனர்.
இரும்புக்கோட்டைக்குள் ஓட்டைபோட்ட ஹமாஸ்:
இஸ்ரேலுக்குள் நுழைய ஹாமாஸ் அமைப்பினர் மிகப்பெரிய அளவிலான தந்திர திட்டங்களையெல்லாம் மேற்கொள்ளவில்லை என்பதுதான் ஆச்சர்யம். சொல்லப்போனால், ஹமாஸ் அமைப்பினர் சாதாரணமாக புல்டோசர் மூலம் எல்லைப்புற கம்பி வேலிகளை உடைத்துக்கொண்டும், வெறுமனவே கம்பிகளின் துளைகளை வெட்டி எடுத்துமே தரை வழியாக இஸ்ரேலுக்குள் ஊடுருவியிருக்கின்றனர். அதேபோல, இன்னும் சிலர் கடல் வழியாகவு ம், பாராகிளைடர் மூலம் வான் வழியாகவும் லாவகமாக நுழைந்து இஸ்ரேலின் கண்களில் மண்னைத் தூவியிருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com