தி.மு.க மூத்த அமைச்சர் துரைமுருகன், திமுக வெறும் 5 அணைகளை மட்டுமே கட்டியிருப்பதாக அண்ணாமலை தவறான குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “தமிழகத்தை 9 ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் விவசாயத்தைப் பாதுகாக்க 12 அணைகளைக் கட்டினார். ஆனால், ஆறாவது முறையாக ஆட்சி செய்யும் திமுக 5 அணைகளை மட்டுமே கட்டியுள்ளது என்று ஒரு தவறான குற்றச்சாட்டை அண்ணாமலை தி.மு.க மீது சுமத்தியிருக்கிறார்.

நம்பியாறு அணை, பொய்கையாறு அணை, கொடுமுடியாறு அணை, கடானா அணை, இராமநதி அணை, பாலாறு, பொருந்தலாறு அணை இப்படி 40-க்கும் மேற்பட்ட அணைகளைக் கட்டியது கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சி. ஆளுங்கட்சியின் மீது எதிர்க்கட்சி குற்றம் குறைகளைச் சொல்வது தவறில்லை. ஆனால், அவ்வாறு சொல்வதற்கு முன், சொல்கிற குற்றச்சாட்டு உண்மையா என்பதை ஒரு முறை பரிசீலனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். இது என்னுடைய நீண்டகால அனுபவத்தில் நண்பர் அண்ணாமலைக்கு சொல்கிற ஒரு யோசனையாகும். இல்லாவிட்டால், அவர் கூறும் குற்றச்சாட்டு யாவும் புஸ்வானமாகிவிடும்” என்று துரைமுருகன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் துரைமுருகனுக்கு பதிலளிக்கும் விதமாக, கொங்கு மண்டலத்தில் திமுக வெறும் ஐந்து அணைகளைக் கட்டியிருப்பதாகக் கூறியதாகவும், துரைமுருகன் அவசரகதியில் தகவலைக் கவனிக்காமல் கோட்டை விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தி.மு.க-வினர், தி.மு.க தலைவர், பேரனுக்கு போஸ்டர் ஒட்டுதல் முதற்கொண்டு, சாதாரண பொதுமக்கள், கடைகள் நடத்துபவர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்துதல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட எவ்வளவு பெரிய சமூக விரோதச் செயல்கள் செய்தாலும், அவர்கள் தி.மு.க-விலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற அறிக்கையே, வழக்கமாக அவர் (துரைமுருகன்) பெயரில் வெளிவரும்.

நேற்றைய தினம், என் மண் என் மக்கள் நடைபயணத்தின்போது, மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியில், கொங்கு பகுதியில் உள்ள 24 அணைகளில், தி.மு.க வெறும் ஐந்து அணைகளையே கட்டியுள்ளது என்று பேசியிருந்தேன். அண்ணன் துரைமுருகன், தி.மு.க நாற்பதுக்கும் மேற்பட்ட அணைகள் கட்டியிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். கொங்கு பகுதியில் ஐந்து அணைகள் என்று நான் குறிப்பிட்டுக் கூறியதை அவர் கவனிக்க மறந்துவிட்டார்.

புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்து விளையாடும் அண்ணன் துரைமுருகன், அவசரகதியில், இந்த சிறிய தகவலைச் சரிவர கவனிக்காமல் கோட்டை விட்டுவிட்டாரே என்பது வருத்தத்தைத் தருகிறது. மேலும் தி.மு.க கட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ள அணைகளில் பல, அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை என்று தமிழக அரசு இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றையும் தி.மு.க-வினர் திருத்த மறந்துவிட்டார்கள் என்பது, அண்ணன் துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களை வேண்டுமென்றே முன்னிறுத்தி பின் நின்று விளையாடுகிறார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது” என்று பதிவிட்டிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com