இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் வாதிடுகையில், “லஞ்ச ஒழிப்புத்துறை என்பது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அமைப்பு. அதன் அதிகார எல்லைக்குள் ஒன்றிய அரசு, மாநில அரசு ஊழியர்கள் என அனைவரும் இருக்கின்றனர். இது போன்று லஞ்ச முறைகேடுகளில் அதிகாரிகள் ஈடுபடும்போது, அவர்களைக் கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்த முழு அதிகாரம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு இருக்கிறது. அதற்கென தனி காவல் நிலையம் அமைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி சட்ட விதிகளுக்கு உட்பட்டே கைதுசெய்யப்பட்டிருக்கிறார். மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை கைதுசெய்வதற்கு முழு அதிகாரம் படைத்தது, இது குறித்து ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகள் தெளிவாக இருக்கின்றன” எனக் கூறி, உச்ச நீதிமன்ற உத்தரவுகளை அறிக்கையாகத் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆஜராகி வாதிடுகையில், “கைது நடவடிக்கையின்போது அரசியலமைப்புச் சட்டம் வகுத்திருக்கும் அனைத்து விதிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட கைதுசெய்யப்பட்ட நபரின் வீடுகளில் சோதனையிடும்போது எந்த ஒரு விதிமுறை மீறலிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஈடுபடவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இதைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார்.
தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி வாதிடுகையில், இது போன்ற வழக்குகள் பல்வேறு மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி, மாநில உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளைக் குறிப்பிட்டார்.


நன்றி
Publisher: www.vikatan.com