மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற மேல்முறையீடு செய்துள்ளவர்களுக்கு நவம்பர் 25ஆம் தேதி முதல் குறுந்தகவல் அனுப்பப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக ஆயிரம் ரூபாய் பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஒரு கோடியே 6 லட்சம் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பித்தவர்களில் 56.50 லட்சம் பேர் நிராகரிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தகுதிகள் இருந்தும் ஏராளமான பெண்களின் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், விடுபட்டவர்கள் மேல் முறையீடு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி லட்சக்கணக்கானவர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.
அதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில், மொத்தம் 16 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நேற்று முன்தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், நவம்பர் 25ஆம் தேதி முதல் இவர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com