மக்களவையில் நேற்று முன்தினம் சந்திரயான் 3-ன் வெற்றி குறித்த விவாதத்தின்போது, பா.ஜ.க எம்.பி ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சக எம்.பி டேனிஷ் அலியை தீவிரவாதி எனக் கூறியது பெரும் பூதாகரமாக வெடித்திருக்கிறது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க எம்.பி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் வேளையில், மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா, பா.ஜ.க எம்.பி-யை `இனிமேல் இவ்வாறு நடந்துகொள்ளக் கூடாது” என வெறும் வாய் வார்த்தையாகக் கண்டித்தது எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி, “சபாநாயகர் கண்டித்து அனுப்பியது பிரம்மிப்பாக இருக்கிறது. இதைவிட சிறிய விஷயத்துக்கெல்லாம், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போன்றோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மிகவும் வெட்கக்கேடு” என்று விமர்சித்திருந்தார்.


மேலும், காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “நாடாளுமன்ற வரலாற்றில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக இதுபோன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதில்லை. இதனை அவை குறிப்பிலிருந்து நீக்குவது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இதனை ஆராய்ந்து, பா.ஜ.க எம்.பி மீது தண்டனைக்குரிய நடவடிக்கை எடுப்பது மட்டுமே சரியானதாக இருக்கும்” என்று ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதில் நடவடிக்கை எடுக்குமாறு, டேனிஷ் அலியும் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
நன்றி
Publisher: www.vikatan.com