சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வர்த்தக மையத்தில் ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.6.6 லட்சம் கோடி வரை முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இதற்கிடையில், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு அமைந்த பின்னர், `உலகநாடுகள் மத்தியில் இந்தியாவின் மீது நம்பிக்கை அதிகரித்து, முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்’ என்ற கருத்தை உதிர்த்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. மேலும் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, `தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடு அனைத்தும், மோடிக்காகத்தான் வந்திருக்கின்றன’ என்று சொல்லி இருக்கிறார்.

தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்பட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் என்பதை, இந்தியாவே உற்றுநோக்கும் இந்த அவையில் பெரும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். இந்த முதலீடுகள் மூலம் நேரடி மற்றும் மறைமுமாக மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்றார்.
அண்ணாமலையின் பேச்சின் மூலம், முதலீட்டாளர்கள் மாநாட்டில் பா.ஜ.க-வுக்கும் பங்கு உண்டு என்பதை பூடமாக தெரிவிப்பதாகத்தான் பார்க்கப்படுகிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளார் கார்த்தியாயினி, “பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகுதான் உலக நாடுகளுக்கு இந்தியாமீது மதிப்பு கூடியுள்ளது. பிரதமர் நாடு நாடாக பயணித்தன் விளைவாகத்தான் முதலீடுகள் இந்தியாவில் கொட்டுகின்றன உலக நாடுகள். தமிழ்நாட்டில் நிகழ்ந்திருக்கும் மாநாட்டுக்கும் மோடிதான் காரணமே தவிர தி.மு.க அல்ல. எங்கள் மாநிலத் தலைவர் சொல்வதுபோல் பெருமை பேசிக்கொள்ள தி.மு.க-வுக்கு இதில் எதுவுமில்லை. மாநாட்டில்கூட மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அதீத முக்கியத்துவம் தரப்பட்டதை பார்க்கலாம். பல முதலீட்டாளர் மத்திய அமைச்சரை சந்தித்து பேசியதையும் கவனிக்க வேண்டும். எனவே மோடி தலைமையிலான இந்திய அரசின் பொருளாதார கொள்கையையே முதலீட்டுக்கான முக்கிய காராணம்” என்றனர் சுருக்கமாக.

நம்மிடம் பேசிய தி.மு.க செய்தி தொடர்பாளர் சல்மா, “தமிழ்நாடு அரசின்மீது உலக நாடாடுகளுக்கு ஒரு நன்மதிப்பு இருப்பது இந்த மாநாட்டின் வெற்றியின் மூலம் வெளிப்படுகிறது. ரூ. 6.6 லட்சம் கோடி முதலீட்டை ஈர்ப்பது 26 லட்சம் வேலைவாய்ப்புகளை உறுதிசெய்வதெல்லாம் மகத்தான சாதனை. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சம்பாதித்த வெற்றி பங்குக்கு வருகிறது தமிழ்நாடு பா.ஜ.க.
அண்ணாமலை இப்படி பேசுகிறாரே. கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க தான் ஆட்சியில் இருக்கிறது. இதுபோல் எத்தனை மாநிலங்களில் இப்படியாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதென தமிழ்நாடு பா.ஜ.க-வால் சொல்ல முடியுமா? அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது மத்தியில் பா.ஜ.க தானே இருந்தது. அப்போது இந்த அளவுக்கு முதலீடுகள் பெறப்பட்டதா… இல்லையே.

கமிஷன் கேட்கிறார்கள் என நிறுவனம் ஒன்று ஆந்திராவுக்கு சென்றதையெல்லாம் யாரும் மறக்க முடியாது. சரி, தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் எவ்வளவோ இருக்கிறதே.. அங்கெல்லாம் முதலீடு கொட்டி தீர்த்துவிட்டதா… தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. தமிழ்நாடு முதல்வர் தனிக்கவனம் செலுத்தி வெளிநாடுகளுக்கு சென்றுவருவதையும் உற்றுநோக்குகிறது உலக நாடுகள். அதுவே முதலீடுகளுக்கு காரணமே அன்றி பா.ஜ.க அல்ல” என்றார் காட்டமாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com