தென் பகுதியில் பட்டியல் இன மக்களுக்கு ஏற்பட்ட கொடுமை, மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. வட மாநிலத்தில் நடைபெற்றிருந்தால் பொங்கி எழுந்திருப்பார்கள். கண்டதேவி கோயில் தேரோட்டம் நடத்தாதது குறித்து நீதிமன்றம் கடுமையாக கூறியுள்ளது. இந்துக்களின் நம்பிக்கையுடன் எது நடைபெற்றாலும் கலவரம் என்று முத்திரை குத்துவதை விட்டுவிட்டு, தமிழகத்தில் சாதிய வன்கொடுமையை ஒழிக்க பாருங்கள். முதலமைச்சர் 13 மொழிகளில் பேசுவதெல்லாம் இருக்கட்டும், முதலில் மக்களுக்கான மொழியில் பேசி, பட்டியல் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் முற்றிலுமாக நீக்க உறுதியாக இருங்கள்.
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு நீதிமன்றம் உத்தரவு கொடுத்தும் நடத்த ஏன் அனுமதி மறுக்கிறார்கள்… உங்களால் சட்ட ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லையா… எங்களுக்கு மற்ற மொழிகள் வேண்டாம் என்று கூறிவிட்டு இன்று, `எனது பேட்டி 13 மொழிகளில் ஒளிபரப்பாகிறது” என்று முதல்வர் கூறுகிறார். வயிற்று பிழைப்புக்காக மற்ற மொழிகளை கற்றுக் கொள்ளக் கூடாது. ஆனால், அரசியல் பிழைப்புக்காக மற்றும் மொழிகளை கற்றுக் கொள்ளலாம். மற்ற மொழிகளை கற்றுக்கொள்வதால் தமிழ் மொழிக்கு பின்னடைவு ஏற்படாது.
ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேச வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தில் 167-வது பிரிவின்படி எந்த பிரச்னையாக இருந்தாலும், ஆளுநரிடம் சென்று விவாதிக்க வேண்டும். நட்புறவுடன் கூடிய அணுகுமுறையை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை, விருந்திற்கு அழைத்தால் ஏன் புறக்கணிக்க வேண்டும்… இது போன்ற நேரங்களில்தான் பேச முடியும். புதுச்சேரியில்கூட காங்கிரஸ், தி.மு.க-வினர் வரமாட்டோம் என்று சொல்வது நல்ல பழக்கம் இல்லை. தமிழகத்தில் இந்த பிரச்னை காரணமாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள்கூட செய்தியாகுகிறது. இந்தியா கூட்டணி தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு என்றெல்லாம், அவர்கள் சொல்லிகொண்டே இருப்பார்கள்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை சென்றுள்ளார், மத்திய அமைச்சர் ஜெயசங்கர் பலமுறை இலங்கை சென்று வந்தார். தாங்கள் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டதற்கு பாரதத்திலிருந்து வந்த உதவிதான் காரணம் என்று இலங்கை பிரதமர் சொல்லியிருக்கிறார். தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று என்னிடமே அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஆனால், இவர்களின் ஆட்சியின் போதுதான் அங்கு படுகொலைகள் நடைபெற்றது. மத்தியில் இருந்து எத்தனை அமைச்சர்கள் அங்கு சென்றார்கள். அவர்களின் கூட்டணியில் காவிரி நீரைக்கூட நட்போடு பெற்றுத்தர முடியவில்லை.
இந்தக் கூட்டணி மத்தியில் இருந்தபோதுதான் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இவர்கள் எத்தனை முறை டெல்லி சென்று தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்துங்கள் என்று சொன்னார்கள்… ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யவில்லை” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com